முதல்வரிடம் ரூ.50 லட்சம் கொரோனா நிவாரண நிதி அளித்த ரஜினி
சென்னை : நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் பரவல் அதிகரித்து, நாளுக்கு நாள் உயிரிழப்புக்களும் அதிகரித்து வருகிறது. பலர் மருத்துவ வசதிகள் இன்று அவதிப்படுகின்றனர். ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலின், கொரோனாவிற்கு எதிரான போரில் வெற்றி கொள்ள அனைவரும் தாராள நிதி அளிக்கும் படி கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து கோலிவுட் பிரபலங்கள் பலரும் முதல்வரை நேரில் சந்தித்து நிவாரண நிதியை வழங்கி வருகின்றனர்.
ஏற்கனவே நடிகர் சிவக்குமார், டைரக்டர் வெற்றிமாறன், ரஜினியின்மகள் சவுந்தர்யா ஆகியோர் நிதி அளித்துள்ளனர். நடிகர் அஜித் ரூ.25 லட்சம் அளிப்பதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினை, ரஜினி இன்று நேரில் சந்தித்தார்.
அப்போது ரூ.50 லட்சத்தை கொரோனா நிவாரண நிதிக்காக, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரஜினி வழங்கினார். கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில் ஆக்சிஜன், தடுப்பூசி போன்ற மருத்துவ பற்றாக்குறையை போக்க இந்த தொகையை அரசு செலவிட உள்ளது.
முதல்வரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, அரசு அமல்படுத்தி உள்ள விதிகளை தமிழ் மக்கள் கடுமையாக பின்பற்ற வேண்டும். இந்த கொடிய வைரசில் இரந்து நாம் மீண்டு வர இது ஒன்று தான் வழி என தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











