நான் பேசினாலே பிராப்ளம்.. வாயில கொழுக்கட்டையா? தர்மன் பட விழாவில் ரஜினிகாந்த் பேச்சு!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 173-வது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டில் இன்று சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக 'தலைவர் 173' என அழைக்கப்பட்ட இத்திரைப்படத்திற்கு 'தர்மன்' என அதிரடியாகப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது பாணியில் கலகலப்பாகவும் அதே சமயம் அதிரடியாக பேசினார்.
நான் பேசினாலே பிரச்சினைதான்: மேடையில் பேசத் தொடங்கிய ரஜினிகாந்த், என்னை மேடையில் பேச அழைக்கிறோம் என்று சொல்லும் போதே எனக்கு பயமாக இருக்கிறது. ஏனென்றால் நான் பேசினாலே பிரச்சினைதான். ஒன்னு எனக்கு பிராப்ளம் வரும், இல்லை என்றால் மற்றவர்களுக்கு பிராப்ளம் வரும். சமூக வலைத்தளங்களில் ஏதாவது ஒன்றை கிளப்பி விட்டுக் கொண்டே, எதையாவது பேசிக் கொண்டே இருப்பார்கள். சரி, நான் சும்மா இருந்தால்... இவர் என்ன பேசவே மாட்டேங்குறார், வாயில் என்ன கொழுக்கட்டையா வைத்திருக்கிறார்? என்று கலாட்டா செய்து கிண்டல் செய்வார்கள். சரி பேசலாம் என்று வந்தால், 'இப்ப பேசுங்க' என்று வம்பிழுப்பார்கள்.

ஆனால், ரொம்ப நாள் கழித்துதான் நான் ஒரு உண்மையை தெரிந்து கொண்டேன். நம்மை பிடிக்காதவர்களுக்கு நாம் எது செய்தாலும் அவர்களுக்கு நம்மை பிடிக்காது. அதேபோல, நம்மை பிடித்தவர்களுக்கு நாம் என்ன செய்தாலும் பிடிக்கும் என்று நினைப்பது மிகப்பெரிய முட்டாள்தனம். இதனால் நாம் எப்போதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்
சுந்தர் சி டூ அஸ்வந்த் மாரிமுத்து: சிவாஜி படத்தின் போதே ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒரு படம் பண்ண வேண்டும் என கமல் கேட்டார். அதன் பிறகு அவரும் பிஸியாகி விட்டார், நானும் பிஸியாகி விட்டேன். கடைசியாக என்னைச் சந்தித்த போது, கட்டாயம் ஒரு படம் பண்ண வேண்டும் என்றார். உடனே நானும் சரி பண்ணுவோம் என்று சொன்னேன். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இந்த படத்திற்கு அஸ்வந்த் மாரிமுத்து நான்காவது இயக்குனர். முதலில் ரவிக்குமாரை யோசித்தோம். அதன்பிறகு சுந்தர் சி-யிடம் பேசினோம், ஆனால் அவருக்கு வேறு ஒரு படம் இருந்ததால் வர முடியவில்லை. அதன் பிறகு இயக்குனர் சிபி சக்கரவர்த்தி சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால், அது மிகவும் சென்சிட்டிவ் சப்ஜெக்ட், அதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டோம். அதன் பிறகுதான் அஸ்வந்த் மாரிமுத்து இந்த திரைப்படத்திற்குள் வந்தார்.

சுறுசுறுப்பான இயக்குநர்: அஸ்வந்த் உள்ளே வந்த பிறகு கமல் என்னிடம் வந்து, நான் கதையும் கேட்க மாட்டேன் எதுவும் கேட்க மாட்டேன், எல்லாத்தையும் உங்களிடமே விட்டு விடுகிறேன் என்று சொன்னார். அவர் சொன்ன அந்த வார்த்தைதான் என்னை மேலும் டென்ஷன் ஆக்கிவிட்டது. அவ்வளவு பெரிய ஜாம்பவான் என் மீது முழு பொறுப்பையும் போட்டுவிட்டார். அதன் பிறகு 'இந்த கதை ரிஸ்க் எல்லாம் வேண்டாம், நீங்களும் கதையைக் கேளுங்கள்' என்று கமலிடம் சொன்னேன். அதன் பிறகுதான் அஸ்வந்த் மாரிமுத்துவிடம் கமல் கதையைக் கேட்டு நன்றாக இருக்கிறது என்றார். அஸ்வந்த் மிகவும் எனர்ஜியான இயக்குநர் அவருடைய 'டிராகன்' படம் பார்த்தேன், எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அது வெறும் கமர்சியல் படமாக மட்டுமில்லாமல், ஒரு நல்ல மெசேஜும் இருந்தது.
கமல் செய்த உதவி: எனக்கும் கமலுக்கும் இருக்கிற நட்பை எவ்வளவு சொன்னாலும் அது குறைவாகத்தான் இருக்கும். என் சினிமா கெரியரில் 'இளமை ஊஞ்சலாடுகிறது' படம் வெற்றியைத் தேடித் தந்த படம். அந்த படத்தில் முதலில் நான் நடிப்பதாகவே இல்லை. அதில் முதலில் நடிக்க இருந்தது ஜெய்சங்கர் தான். கமல் தான் இந்த கதாபாத்திரத்தில் ரஜினி நடித்தால் நன்றாக இருக்கும் என்று இயக்குனரிடம் பரிந்துரை செய்தார். அதன் பிறகுதான் இயக்குனர் எனக்கு போன் செய்து அந்த படத்தில் கமிட் செய்தார். கமலால் தான் 'இளமை ஊஞ்சலாடுகிறது' படத்தில் நடிக்கும் வாய்ப்பே எனக்குக் கிடைத்தது. இதுபோல கமல் எனக்குச் செய்த உதவிகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். ராஜ்கமல் தயாரிப்பில் இந்த 'தர்மன்' படத்தில் நான் நடிப்பது மிகப்பெரிய சந்தோஷமாகவும், மிகப்பெரிய பொறுப்பாகவும் இருக்கிறது. இந்த 'தர்மன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளையிலிருந்து (25.06.2026) அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது என்றார்,


Click it and Unblock the Notifications