கடவுளையே அவன் இவன்னு தான் சொல்றோம்.. நானெல்லாம் எம்மாத்திரம்.. அப்போவே செம சம்பவம் செய்த ரஜினி
சென்னை: Rajini Birthday (ரஜினி பிறந்தநாள்) சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 73ஆவது பிறந்தநாள் இன்று. அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தை தெரிவித்துவருகின்றனர்.
இந்திய சினிமாவின் மிக முக்கியமான அடையாளங்களில் ஒருவர் ரஜினிகாந்த். பெங்களூரில் நடத்துநர் வேலை பார்த்துக்கொண்டிருந்த திறமையை மட்டும் எடுத்துக்கொண்டு சென்னை வந்தவர்.

சினிமா கல்லூரியில் இணைந்து படித்து நீண்ட போராட்டத்துக்கு பிறகு கே.பாலசந்தரின் அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
ஸ்டைல் மன்னன்: தொடர்ந்து பாலசந்தர் இயக்கத்தில் நடித்த அவர் கமல் ஹாசனுடனும் இணைந்து நடித்துக்கொண்டிருந்தார். இப்படியே போனால் சரியாக இருக்காது என கமலும், ரஜினியும் இணைந்து முடிவெடுத்து தனியாக நடிக்க ஆரம்பித்தார்கள். அதன்படி தனியாக நடித்த ரஜினி தனது ஸ்டைல், மேனரிசம் உள்ளிட்டவைகளால் அனைவரையும் கவர்ந்தார்.
சூப்பர் ஸ்டார்: ரஜினியின் இந்த ஸ்டைலும் மேனரிசமும் அப்போது தமிழ் சினிமாவுக்கு புதிதாகவே இருந்தது. ஏனெனில் பெரும்பாலான காட்சிகள் அப்போது ஸ்லோ மோஷனில் இருப்பது போன்றே இருக்கும். ஆனால் ரஜினியோ அதில் புதிய வேகத்தை பாய்ச்சினார். இதனால் அவர் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துக்கு சொந்தக்காரர் ஆனார். தமிழ்நாடெங்கும் ரஜினிக்கு ரசிகர் மன்றங்கள் முளைத்தன.
பெரும் சம்பளம்: ரஜினி நடித்த அத்தனை படங்களும் மெகா ஹிட்டாகின. ஒருகட்டத்தில் கமல் ஹாசனை தாண்டிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். சம்பளமும் சகட்டுமேனிக்கு ஏறியது. இப்படி எவ்வளவு பெரிய புகழின் உச்சத்தில் இருந்தாலும் ரஜினிகாந்த் ரொம்பவே எளிமையானவர் என்ற பெயரும் அவருக்கு உண்டு. அதற்கு காரணம் தான் ஆரம்பத்தில் பட்ட கஷ்டத்தை இப்போதுவரை மறக்காதவர் அவர்.
மூன்று முடிச்சு: இந்த சூழலில் ரஜினிகாந்த் செய்த செயல் ஒன்று குறித்து பார்க்கலாம். அதாவது ரஜினிகாந்த் மூன்று முடிச்சு படத்தில் நடித்திருந்த சமயம் அது. அவருக்கு ஒரு சந்தேகம் என்னவென்றால், ரசிகர்கள் பலரும் நம்மை ரசிக்கிறார்களா? என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். ஒருமுறை நாடக சபா ஒன்றில் டெல்லி கணேஷுடன் ரஜினி நின்றிருக்கிறார்.
அப்போது கணேஷை பார்ப்பதற்காக அவரது நண்பர்கள் சிலர் டெல்லியிலிருந்து வந்திருக்கின்றனர். வந்தவர்களுக்கு ரஜினியை அடையாளம் தெரியவில்லை. அவர்களிடம் டெல்லி கணேஷ், படம் ஏதும் பார்த்தீங்களா என கேட்க; அவர்கள், ஓ பார்த்தோமே. சமீபத்தில்கூட மூன்று முடிச்சு பார்த்தோம்.. அவன் யாரு ய்யா கருப்பா ஒருத்தன் இருக்கானே.. ஸ்டைலுல அந்த போடு போடுறான்.. செமயா வருவான் பாரு என.. சிகரெட்லகூட அப்படி ஸ்டைல் செய்றானே என கூறியிருக்கின்றனர்.
அதற்கு டெல்லி கணேஷ், சரி அவரை ஏன் அவன் இவன் என்று சொல்கிறீர்கள் என கேட்டுவிட்டு அருகில் இருந்த ரஜினியை அறிமுகம் செய்துவைத்திருக்கிறார். உடனே அந்த நண்பர்கள், அய்யோ சாரி சார் உங்களை அவன் இவன்னு சொல்லிட்டோம் என கூற; ரஜினிகாந்த்தோ, பரவால்ல பிரதர் கடவுள் முருகனையே நாம் அவன் இவன்னுதான் சொல்றோம். நானெல்லாம் எம்மாத்திரம் என்று சொல்லியிருக்கிறார். அந்த எளிமைதான் அவரை உச்சத்தில் ஏற்றியிருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு தமிழ் பில்மிபீட் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள்..


Click it and Unblock the Notifications











