முத்துலட்சுமிக்கு ரூ 25 லட்சம் நஷ்டஈடு - வனயுத்தம் இயக்குநருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

இதை ஏற்று வழக்கை வாபஸ் பெற சம்மதம் தெரிவித்துள்ளார் முத்துலட்சுமி.
சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கை வனயுத்தம் என்ற பெயரில் தமிழிலும், அட்டகாசா என்ற பெயரில் கன்னடத்திலும் சினிமாவாக எடுத்துள்ளார் இயக்குநர் ஏஎம்ஆர் ரமேஷ்.
ஆரம்பத்தில் இந்தக் கதையை ராம் கோபால் வர்மா மூலம் படமாக எடுப்பதாக முத்துலட்சுமி கூறியிருந்தார். ஆனால் அதற்குள் ஏஎம்ஆர் ரமேஷ் முந்திக் கொண்டு படத்தையும் அறிவித்துவிட்டார்.
அப்போதிலிருந்தே இந்தப் படத்தை எதிர்த்து வருகிறார் முத்துலட்சுமி.
இப்படத்தை எதிர்த்து முத்துலட்சுமி ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். முத்துலட்சுமிக்கு படத்தை திரையிட்டு காட்டும்படி நீதிபதிகள் உத்தரவிட்டது. படத்தை பார்த்த அவர் ஆட்சேபனைக்குரிய காட்சிகளை பட்டியலிட்டு அவற்றை நீக்கவேண்டும் என்றார். நீதிபதிகள் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிட்டு படத்தை ரிலீஸ் செய்ய உத்தரவிட்டது.
ஆனால் இரண்டு காட்சிகளை மட்டும் நீக்கியிருந்தார் இயக்குநர். இன்று படம் வெளியாகும் என்றும் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், 'வனயுத்தம்' படத்தில் ஆட்சேபனைக்குரிய காட்சிகளை நீக்கவில்லை. எனவே அந்தப் படம் வெளியாகக் கூடாது. தனக்கு நஷ்டஈடாக பெரும் தொகையை தரவேண்டும் என்று முத்துலட்சுமி கூறியிருந்தார்.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வீரப்பன் மனைவி முத்துலட்சுமிக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதை தயாரிப்பாளர் ஏற்றுக்கொண்டார். மேலும், படத்தின் தலைப்பில் இடம்பெற்றுள்ள 'உண்மை கதை' என்ற வாசகத்தையும் நீக்கவும் அவர் ஒப்புக்கொண்டார். முத்துலட்சுமி ஆட்சேபித்த காட்சிகளில் பெரும்பாலானவற்ற நீக்கவும் ஒப்புக் கொண்டார் இயக்குநர்.
இதையடுத்து, முத்துலட்சுமி வழக்கை வாபஸ் பெற முடிவு செய்துள்ளார். படமும் நாளை வெளியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











