தயாரிப்பாளர்களை காப்பாத்துங்க... - அமைதிப்படை தயாரிப்பாளர் வேண்டுகோள்
சென்னை: இன்றைக்கு வந்த வேகத்தில் தயாரிப்பாளர்கள் காணாமல் போகும் நிலை உள்ளது. எனவே தயாரிப்பாளர்களைக் காப்பாற்றுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் அமைதிப்படை 2 படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.
ரன்வீர் சிங் கக்வால் வழங்கும் வாரியர்ஸ் கிளான் பிக்சர்ஸ் தயாரிக்கும் என் உயிர் என் கையில் படத்தின் தமிழ் பதிப்பு அறிமுக விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது. விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சுரேஷ் காமாட்சி என் உயிர் என் கையில் படத்தின் டிரைலரை வெளியிட கேரள நாட்டிளம் பெண்களுடனே படத்தின் இயக்குனர் -இசையமைப்பாளர் எஸ் எஸ் குமரன் பெற்றுக் கொண்டார்.
விழாவில் பேசிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, "பொதுவாக ஒரு படம் வெளியாகிவிட்டாலே அதில் பங்குபெறும் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் நடிகர்களுக்கும் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்துவிடுகின்றன... படம் தோல்வியடைந்து விட்டாலோ முதலில் காணாமல் போவது அதன் தயாரிப்பாளர்தான்.

படம் வெளியாகி பத்திரிக்கைகளில் விமர்சனம் வருவதற்குள் படத்தைத் தியேட்டரை விட்டுத் தூக்கி விடுகிறார்கள்... கேட்டால் கேண்டீன்ல வியாபரமே இல்லை என்கிறார்கள. ஒரு படம் நல்ல படம் என்று மக்களுக்குத் தெரியவந்து அந்தப் படத்தைப் பார்க்க தியேட்டருக்கு வருவதற்குள் படத்தை எடுத்து விட்டால் எப்படி தயாரிப்பாளர் பிழைக்க முடியும்?
ஒரு நாளைக்கு 100 இயக்குனர்கள் வருகிறார்கள், 100 நடிகர்கள் வருகிறார்கள். ஆனால் தயாரிப்பாளர்களின் எண்ணிக்கை மட்டும் குறைந்து கொண்டே வருகிறது. தயாரிப்பாளர்கள் இருந்தால்தானே சினிமா வளரும்... தயாரிப்பாளர்களின் இந்த நிலை மாறவேண்டும்.... அதற்கு நாம் ஏதாவது செய்யவேண்டும்," என்று கேட்டுக் கொண்டதுடன், "புதிய முயற்சிகளுக்கு என்றுமே தமிழ் ரசிகர்கள் பெரிய வரவேற்பு கொடுப்பார்கள், ஒரு பெட்டிக்குள் மாட்டிக்கொண்ட கதாநாயகனின் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, ஒருவரே நடிக்கும் இந்தப்படமும் நிச்சயம் வெற்றிபெறும்," என்று தனது வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார்.
எஸ்எஸ் குமரன்
இசையமைப்பாளர் - இயகுனர் எஸ் எஸ் குமரன் பேசும் போது, "இந்தப் படத்தில் புதுமையாக என்ன இருக்கிறது என்கிற சிந்தனையுடனேயேதான் ரசிகர்கள் தியேட்டருக்கு வருகிறார்கள். அந்த வகையில் இந்தப்படத்தில் புதுமையான கதைக்களத்தைக் கையாண்டிருக்கிறார்கள். படம் வெற்றிபெற வாழ்த்துகள்..." என்றார்.
ஒரு மணி நேரம் 45 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தினை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகளில் எடுத்திருக்கிறார்கள். படத்தின் கதாநாயகன் ஜெய் ஆகாஷ் தமிழகத்தைச் சேர்ந்த டெல்லியில் பணிபுரியும் ஒரு ஆடிட்டராக வருகிறார். ஒரு சந்தர்ப்பத்தில் அவர் கண் விழித்துப் பார்க்கும் போது மூன்றுக்கு மூன்று அடி கொண்ட பெட்டியில் அவரை அடைத்திருக்கிறார்கள்... அவர் ஏன்..? எதற்காக..? யாரால்..? இப்படி அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார் என்பதை விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கிறார்களாம்.
படம் முழுவதும் ஒரே நடிகர் தான் மேலும் மிகவும் குறைந்த இடத்தில் படம் பிடிக்கப்பட்ட இந்தியத் திரைப்படம் என்கிற சாதனையை இந்தப்படம் நிகழ்த்தியிருப்பதாக தயாரிப்பாளர் தெரிவித்தார்.
விழாவில் என் உயிர் என் கையில் படத்தின் கதா நாயகன் ஜெய் ஆகாஷ், வசனகர்த்தா சித்தார்த், ஜெய் ஆகாஷுடன் ஆனந்தம் ஆரம்பம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் மிஸ் இந்தியா போட்டியாளர் ஆலிஷா, நடிகை இந்து, அபி சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications