Vanangaan - வணங்கான் படத்தில் சூர்யாவை பாலா அப்படி செய்தது உண்மைதான்.. தயாரிப்பாளர் அதிரடி
சென்னை: வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகியதை அடுத்து அருண் விஜய் ஹீரோவாக கமிட்டானார். படத்தின் ஷூட்டிங் முடிந்து டப்பிங் பணிகளும் தொடங்கிவிட்டன. ஆனால் சூர்யா எதற்காக வணங்கானிலிருந்து விலகினார் என்பதே ரசிகர்களின் பெரும் கேள்வியாக இருந்தது. ஏனெனில் சூர்யாவை உருவாக்கியவர்களில் பாலா முக்கியமானவர். இந்த சூழலில் சுரேஷ் காமாட்சி பேசியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
சேது படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாலா. விக்ரம், அபிதா, ஸ்ரீமன், சிவகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்த அந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. குறிப்பாக சியான் விக்ரமுக்கு சினிமாவில் நிலையான இடத்தை பெற்றுக்கொடுத்தது. அந்தப் படம்தான் பாலாவுக்கும் சரி விக்ரமுக்கும் நல்ல வாழ்க்கைக்கான கதவை திறந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நந்தா: சேது படத்தை குறிஞ்சி மலர் என்று ஏகத்துக்கும் கொண்டாடினார்கள் விமர்சகர்களும், ரசிகர்களும். ஒரே படத்தில் புகழின் உச்சிக்கு சென்ற அவருக்கு இரண்டாவது பட வாய்ப்பும் உடனடியாக கிடைத்தது. அதன்படி அபராஜித் பிலிம்ஸ் தயாரிப்பில் சூர்யாவை வைத்து நந்தா படத்தை இயக்கினார். அந்தப் படமும் நல்ல ஹிட்டாகி காலங்கடந்து பேசப்படும் படைப்பாக மாறி நிற்கிறது. சூர்யாவுக்கும் நல்ல பெயரை அந்தப் படம்தான் பெற்றுக்கொடுத்தது.
என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்: முதல் இரண்டு படங்களிலேயே முக்கியமான இயக்குநர் என்று பாலா பெயர் எடுத்தார். அடுத்தடுத்து அவர் இயக்கிய பிதாமகன், நான் கடவுள் உள்ளிட்ட படங்களும் மிகச்சிறந்த படைப்பாக இருக்கின்றனர். அதிலும் பாலா சொன்னால் நடிகர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்ற நிலைதான் சினிமாவில் இருந்தது. அவரது இயக்கத்தில் ஓரிரு காட்சிகளிலாவது தோன்றிட வேண்டும் என நடிகர்கள் தவம் இருந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
வணங்கான்: ஃபுல் ஃபார்மில் இருந்த பாலா கடந்த சில வருடங்களாகவே ஃபார்ம் அவுட்டில் இருக்கிறார். அவர் இயக்கிய வர்மா படம் கிடப்பில் போடப்பட்டது, தனது மனைவி மலருடனான விவாகரத்து என பாலாவுக்கு கொஞ்சம் போதாத காலம்தான் இப்போது. அதற்கெல்லாம் மருந்தாக வணங்கான் இருந்தது. சூர்யாவே தயாரித்து நடிக்கவும் கமிட்டானார்.இதன் மூலம் பாலா தரமான கம்பேக் கொடுப்பார் என்று அவரது ரசிகர்கள் தெரிவித்தனர்.
வெளியேறிய சூர்யா: ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக வணங்கான் படத்திலிருந்து சூர்யா வெளியேறினார். அதற்கான எந்த காரணமும் தெரியவில்லை. அதேசமயம் ஷூட்டிங் ஸ்பாட்டில் சூர்யாவை வெறுங்காலோடு பாலா தொடர்ந்து ஓட வைத்தார். ஒருகட்டத்தில் சூர்யாவை அலட்சியமாகவும் நடத்தியதாக கூறப்பட்டது. ஆனால் இருவரும் விலகியதற்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. சூழல் இப்படி இருக்க அருண் விஜய்யை வைத்து வணங்கான் படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டார் பாலா. சில நாட்களுக்கு முன்பு படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. படமானது மே மாதம் ரிலீஸ் ஆகவிருக்கிறது.
சுரேஷ் காமாட்சி பேட்டி: இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வணங்கான் படத்தில் சூர்யாவுக்கும், பாலாவுக்கும் என்ன பிரச்னை என்பது குறித்து பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், "சூர்யாவை பாலா அடிக்கவில்லை. ஓடவிட்டார் என்பது உண்மையாககூட இருக்கலாம். ஏனெனில் அருண் விஜய்யையும் படத்தின் ஷூட்டிங்கில் ஓடவிட்டார். சூர்யா இப்போது இருக்கும் உயரத்துக்கும், வியாபாரத்துக்கு இந்தக் கதையில் நடித்தால் ரசிகர்களுக்கு பிடிக்காமல் போய்விடும் என பாலாவிடம் சுமூகமாக பேசிவிட்டுதான் இதிலிருந்து விலகினார். அருண் விஜய்க்கு இந்த ரோல் லைஃப் டைம் செட்டில்மெண்ட் ரோலாக இருக்கும்" என்றார்.


Click it and Unblock the Notifications











