“ரஜினியும் கமலும் என்னை சந்திக்க விரும்பவில்லை”... நடிகர் சுரேஷ் மேனன் வேதனை !
மை கர்மா எனும் அறிவுசார் வினா விடை போட்டிக்கான செயலியை நடிகர் சுரேஷ் மேனன் அறிமுகப்படுத்தியுள்ளார்.
Recommended Video

சென்னை: சமூக நலன் சார்ந்த விஷயங்கள் குறித்து பேசுவதற்காக ரஜினி மற்றும் கமலை சந்திக்க நேரம் கேட்டதாகவும், ஆனால் அவர்கள் தன்னை சந்திக்க விரும்பவில்லை என்றும் நடிகர் சுரேஷ் மேனன் தெரிவித்துள்ளார்.
புதிய முகம் திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் சுரேஷ் மேனன். இயக்குநர், ஒளிப்பதிவாளர் என தமிழ் சினிமாவின் பல துறைகளிலும் பணியாற்றிய இவர், நடிகை ரேவதியின் முன்னாள் கணவர் ஆவார். இவர் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சுரேஷ் மேனன் நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

சினிமாவில் நான்:
அப்போது அவர், " 40 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் பணியாற்றி வருகிறேன். உதவி ஒளிப்பதிவாளர் வேலையில் ஆரம்பித்து, இயக்குனர், நடிகர் என எல்லா வேலைகளையும் செய்துவிட்டேன்.

ஒரு வழி சாலை:
சினிமா பணிகள் ஒருபக்கம் இருந்தாலும், சமூக நலன் சார்ந்த பணிகளிலும் நான் ஈடுபட்டு வருகிறேன். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், சென்னை ராஜ்பவன் கிண்டி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, அந்த பாதையை ஒருவழி சாலையாக மாற்ற ஆலோசனை தந்தேன். அதன் அடிப்படையில் தான் அங்கு போக்குவரத்து மாற்றப்பட்டது.

மன திருப்தி:
இதுபோல நிறைய இலவச ஆலோசனைகள் அளித்து வருகிறேன். இதனால் என்னை அவ்வப்போது தலைமை செயலகத்தில் பார்க்கலாம். பொருளாதார ரீதியாக எனக்கு எந்த பயனும் ஏற்படப்போவதில்லை. ஆனால் ஒரு மன திருப்திக்காக இதனை செய்து வருகிறேன்.

புதிய செயலி:
அதன் அடிப்படையில் தான் அறிவுசார் வினாவிடை போட்டி செயலி ஒன்றை ஆரம்பித்துள்ளேன். எனது நண்பர்கள் சிலரின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்முள்ள இந்த செயழிக்கு மை கர்மா (my karma) என பெயர் வைத்துள்ளோம். இது எந்த மதமும் சார்ந்தது கிடையாது.

தினமும் நேரடி ஒளிபரப்பு:
இந்தியாவை பற்றி தான் கேள்விகள் கேட்கப்படும். குடும்பத்துடன் அமர்ந்து இந்த போட்டியில் பங்கேற்கலாம். தினமும் மாலை 7 மணி, 8 மணி, 9 மணி என 3 முறை இப்போட்டி நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்த செயழியை பதிவிறக்கம் செய்து விளையாடலாம். ஒரு லட்சம் ரூபாய் வரை பரிசுத் தொகை உண்டு.

ரஜினி, கமல்:
சமூக நலன் சார்ந்து பல்வேறு விஷயங்களை செய்து வருகிறேன். சில ஆலோசனைகளுடன் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டேன். ஆனால் கிடைக்கவில்லை. ரஜினி, கமலை சந்திக்கவும் நேரம் கேட்டேன். ஆனால் அவர்களுக்கு என்னை சந்திக்க விருப்பமில்லை. கட்சி பேதமில்லாமல் சமூக பணியில் ஈடுபடவே நான் விரும்புகிறேன்.

தமிழக அரசியல்:
நான் ஒரு மலையாளி என்பதால் தமிழ்நாட்டில் என்னால் அரசியலில் சாதிக்க முடியாது. அதேபோல் நான் இங்கு வந்து 50 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அதனால் அங்கும் (கேரளா) என்னால் ஒண்ணும் சாதிக்க முடியாது", என சுரேஷ் மேனன் கூறினார்.


Click it and Unblock the Notifications