Suriya: கல்வி விருது வழங்கிய விஜய்... சைலண்டாக மாணவர்களை சந்தித்த சூர்யா... பரபரக்கும் கோலிவுட்
சென்னை: ஜூன் 17ம் தேதி நடைபெற்ற விஜய் கல்வி விருது வழங்கும் விழா பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
முக்கியமாக தொகுதி வாரியாக மாணவர்களுக்கு விருது வழங்கப்பட்டது விஜய்யின் அரசியல் கணக்கு என கூறி வருகின்றனர்.
அதேநேரம் விஜய்யின் இந்த முயற்சிக்கு பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் விஜய் விருது வழங்கிய அதேநாளில் நடிகர் சூர்யாவும் தனது அகரம் பவுண்டேசன் மாணவர்களை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
மாணவர்களை ரகசியமாக சந்தித்த சூர்யா
லியோ படத்தில் பிஸியாக நடித்து வரும் விஜய், திடீரென மாணவர்களை சந்தித்து விருது வழங்கினார். இதுகுறித்து ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், கடந்த வாரம் சனிக்கிழமை நீலாங்கரையில் உள்ள ஆர்கே கன்வென்ஷன் சென்டரில் இந்த விருது விழா நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களும் அவர்களது பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.
சுமார் 10 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் விஜய் இறுதிவரை இருந்து விருது வழங்கிவிட்டுச் சென்றார். திரையுலகம் மட்டுமின்றி அரசியலில் இருந்தும் விஜய் மீதான கவனம் அதிகரித்துள்ளது. இன்னும் சில வருடங்களில் விஜய் அரசியலில் முக்கியமான இடத்தை பிடிப்பார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதனால் இந்த கல்வி விருது வழங்கும் விழா ரொம்பவே முக்கியத்துவமானதாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் விஜய் மாணவர்களை சந்தித்து விருது வழங்கிய நாளில், நடிகர் சூர்யாவும் தனது அகரம் பவுண்டேசன் மாணவர்களை நேரில் சந்தித்துள்ளார். கடந்த சில வருடங்களாக அகரம் பவுண்டசன் மூலம் ஏராளமான மாணவர்களுக்கு கல்வி வழங்கி வருகிறார். அவர்கள் அனைவருமே பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. கல்வி, வேலைவாய்ப்பு என பல உதவிகளை செய்து வருகிறார் சூர்யா.
இந்தச் சூழலில் விஜய் பிரம்மாண்டமான விழா ஏற்பாடு செய்து மாணவர்களுக்கு விருது வழங்கிய அதேநாளில், சூர்யாவும் மாணவ, மாணவிகளை சந்தித்துள்ளார். ஆனால், இந்த சந்திப்பு எவ்வித அறிவிப்பும் ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ரொம்பவே சைலண்டாக நடந்து முடிந்துள்ளது. அதிகளவில் இல்லாமல் குறைவான மாணவர்களை மட்டுமே சந்தித்துள்ளார் சூர்யா. ஆனால், இந்த சந்திப்பு நடந்ததன் காரணம் எதுவும் இதுவரை தெரியவில்லை.
விஜய் தனது அரசியல் லாபத்திற்காக தான் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கினார். இல்லையென்றால் சூர்யாவை போல ஆக்கப்பூர்வமாக மாணவர்களுக்கு பல உதவிகள் செய்திருக்கலாம் என விமர்சனங்கள் எழுந்தன. அதனை உறுதி செய்யும் விதமாக சூர்யா எப்போதுமே எந்த பிரம்மாண்ட ஏற்பாடுகளும் இல்லாமல் மாணவர்களை சந்தித்து உதவி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











