Suriya and Hari Combo - கருத்து வேறுபாடு ஓவர்.. சூர்யாவுடன் மீண்டும் இணையும் ஹரி?
சென்னை: Suriya And Hari (சூர்யா ஹரி கூட்டணி) இயக்குநர் ஹரிக்கும் சூர்யாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு தீர்ந்த சூழலில் இருவரும் மீண்டும் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகி சூர்யா ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.
தமிழின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் சூர்யா. சமீபமாக தான் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு கதையிலும் வித்தியாசம் காட்டி வரும் சூர்யாவுக்கு ரசிகர்களின் எண்ணிக்கை கூடியிருக்கிறது. ஜெய் பீம், சூரரைப் போற்று போன்ற சமூக அக்கறையுள்ள படங்களில் அவர் தொடர்ந்து நடித்துவருவது அவருக்கு நன்மதிப்பையும் பெற்று தந்தது. இப்போது அவர் கங்குவா படத்தில் நடித்துவருகிறார்.

கங்குவா: சிறுத்தை சிவா இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் நடிப்பதற்கு கமிட்டானார் சூர்யா. பத்து மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் படம் வெளியாகவிருக்கிறது. படத்துக்கு கங்குவா என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் டைட்டில் சமீபத்தில்தான் அறிவிக்கப்பட்டது. சரித்திர கால படமாக உருவாகும் கங்குவாவுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இதனை முடித்துவிட்டு அவர் வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருக்கிறார் என கருதப்படுகிறது.
ஹரி கூட்டணி: சூர்யாவின் கேரியரில் ஹரிக்கு முக்கிய பங்கு உண்டு. சூர்யாவை வைத்து அவர் இயக்கிய ஆறு, வேல், சிங்கம் சீரிஸ் ரசிகர்களிடம் பரவலான வரவேற்பை பெற்ற படங்கள். குறிப்பாக சிங்கம் படத்தின் முதல் பாகமும், இரண்டாம் பாகமும் மிகப்பெரிய வெற்றி பெற்று கமர்ஷியல் பாதையில் சூர்யாவின் கால்களை வலுவாக ஊன்ற வைத்தன. இதனால் ஹரி - சூர்யா இணைந்தாலே அந்தப் படம் மெகா ஹிட்டாகிவிடும் என்ற நம்பிக்கை ரசிகரக்ளிடம் எழுந்தது.
சிங்கம் 4: இதற்கிடையே கடந்த 2017ஆம் ஆண்டு இருவரது கூட்டணியி சிங்கம் படத்தின் மூன்றாம் பாகம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. அதனையடுத்து சிங்கம் படத்தின் நான்காம் பாகம் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. தொடர்ந்து சூர்யாவை வைத்து அருவா என்ற படத்தை ஹரி இயக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியானது.
உறவை வெட்டிய அருவா: அருவா பக்கா கமர்ஷியல் படமாக உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் கதையில் சில விஷயங்கள் சூர்யாவுக்கும், ஹரிக்கும் கருத்து வேறுபாட்டை உருவாக்கியிருப்பதாகவும், அதனால் படம் கைவிடப்பட்டது எனவும் தகவல் வெளியானது. அதனைத் தொடர்ந்து அருண் விஜய்யை வைத்து யானை படத்தை இயக்கினார் ஹரி. யானை படத்தின் கதைதான் அருவா படத்தின் கதை எனவும் பரபரப்பாக பேசப்பட்டது.

கருத்து வேறுபாடு ஓவர்: சூழல் இப்படி இருக்க சமீபத்தில் ஹரியும், அவரது மனைவி ப்ரீத்தியும் இணைந்து புதிய டப்பிங் ஸ்டூடியோவை திறந்தார்கள். அதனை நடிகர் சூர்யா நேரில் வந்து திறந்துவைத்தார். எனவே சூர்யாவுக்கும், ஹரிக்கும் இடையே நிலவிய கருத்து வேறுபாடு தீர்ந்துவிட்டதாக தகவல் வெளியானது. மேலும், கருத்து வேறுபாடு தீர்ந்துவிட்டதால் இருவரும் மீண்டும் இணைவார்களா என்ற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பிவந்தனர்.
மீண்டும் இணையும் ஹரி, சூர்யா: இந்நிலையில் சூர்யாவை வைத்து ஹரி புதிய படத்தை இயக்கவிருக்கிறார் என கூறப்படுகிறது. இந்தப் படமும் ஹரி - சூர்யா காம்போவின் ஹிட் ஜானரான போலீஸ் ஸ்டோரியாக உருவாகுமா என்ற ஆவல் உருவாகியிருக்கிறது.
அதேபோல் சூர்யாவை வைத்து மட்டுமின்றி கார்த்தியை வைத்து ஒரு படத்தையும், விஷாலை வைத்து ஒரு படத்தையும் ஹரி இயக்க திட்டமிட்டிருக்கிறார் என்றும் கோடம்பாக்கத்தில் பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த மூன்று படங்களும் டேக் ஆஃப் ஆகும்பட்சத்தில் ஹரி மீண்டும் பிஸியான இயக்குநரக மாறிவிடுவார்.


Click it and Unblock the Notifications











