Suriya: சூர்யாவுடன் இணையும் அயலான் இயக்குநர்... மெகா பட்ஜெட்டில் வேற லெவல் சயின்ஸ் பிக்ஷன்!
சென்னை: சூர்யாவின் கங்குவா இந்தாண்டு வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து சூர்யா 43, வாடிவாசல் படங்களில் நடிக்கவுள்ளார் சூர்யா. அதன் பின்னர் அவரது புதிய படத்தை அயலான் இயக்குநர் ரவிக்குமார் இயக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. இன்று நேற்று நாளை, அயலான் படங்கள் வரிசையில் இதுவும் சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் உருவாகவுள்ளதாக ரவிக்குமார் கூறியுள்ளார்.
சூர்யாவுடன் இணையும் அயலான் இயக்குநர்
கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா, தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கும் இந்தப் படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கும் படத்தில் நடிக்கிறார் சூர்யா. இந்தப் படத்தின் ஷூட்டிங் பொங்கலுக்குப் பின்னர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தொடங்குகிறது.

அதனையடுத்து வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கங்குவா ஷூட்டிங் முடிந்ததும் வாடிவாசல் தொடங்கும் என சொல்லப்பட்டது. ஆனால், வெற்றிமாறன் இன்னும் விடுதலை 2ம் பாகத்தில் பிஸியாக இருப்பதால் வாடிவாசல் தொடங்க தாமதமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் வாடிவாசல் படத்தில் அமீர் இணைந்துள்ளதால், சூர்யா நடிப்பாரா என்பதும் சந்தேகமாக உள்ளது.
இதன் தொடர்ச்சியாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் ரோலக்ஸ் படத்திலும் சூர்யா நடிக்கவுள்ளார். இந்நிலையில், அயலான் இயக்குநர் ரவிக்குமார் சூர்யாவுக்காக ஒரு கதை கூறியுள்ளாராம். 2015ம் ஆண்டு வெளியான இன்று நேற்று நாளை திரைப்படம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. விஷ்ணு விஷால், கருணாகரன் நடித்திருந்த இந்தப் படத்தை டைம் ட்ராவல் பின்னணியில் சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் இயக்கியிருந்தார் ரவிக்குமார். 'இன்று நேற்று நாளை’ தான் ரவிக்குமாரின் முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தை இயக்கியுள்ளார். 2018ம் ஆண்டு தொடங்கப்பட்ட அயலான் பல தடைகளை கடந்து பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகிறது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் இரு தினங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களை சிலிர்க்க வைத்திருந்தது. சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் ஒரு ஏலியனை வைத்துக்கொண்டு மிரட்டியிருந்தார் ரவிக்குமார். கிராஃபிக்ஸ் வேலைகளும் ரசிக்கும் படி அமைந்திருந்தன.
இந்த நிலையில் தான் சூர்யாவை சந்தித்து ஒரு சயின்ஸ் பிக்ஷன் ஜானர் கதையை கூறியுள்ளார் ரவிக்குமார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்காக சூர்யாவும் கால்ஷீட் கொடுத்துவிட்டாராம். இந்தப் படத்தையும் சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் இயக்கவுள்ள ரவிக்குமார், அபோகாலிப்டிக் பின்னணியில் இருக்கும் என சொல்லப்படுகிறது. சூர்யா 43, வாடிவாசல் படங்கள் முடிந்ததும் ரவிக்குமார் கூட்டணியில் சூர்யா இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











