எதுக்குமே உதவாம இருந்தேன்.. கேமரா முன்னாடி வந்து நிப்பேன்னு நினைக்கல.. சூர்யா உருக்கமான பேச்சு!
சென்னை: அகரம் அறக்கட்டளை மூலமாக நடிகர்கள் சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி மாணவர்களுக்கான கல்விச் சேவையை பல ஆண்டுகளாக செய்து வரும் நிலையில், நடிகர் கார்த்திக்கு 2 வயது இருக்கும் போதே இந்த கல்வி அறக்கட்டளையை ஆரம்பித்து நடத்தி வருவதாக கூறினர்.
சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி மூவரும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினார்கள். ஜீரோவில் இருந்து ஆரம்பித்தும் சாதனை படைக்கலாம் என சூர்யாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த கார்த்தி இந்த விழாவிலும், அண்ணன் சூர்யாவுக்கு சினிமாவில் ஆசையே இல்லை என்றும் தனக்குத்தான் சினிமா ஆசை இருந்து சினிமாவுக்கு வந்தேன் என்றும் கூறினார்.

அதன் பின்னர் பேசிய நடிகர் சூர்யா சினிமாவுக்கு வருவேன் நடிகன் ஆவேன் என கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவில்லை என பேசியிருந்தார்.
எல்லாமே மொபைல் ஆகிடுச்சா?: பத்திரிகையாளர் சந்திப்பின் போது, பல யூடியூப் சேனல்கள் வெறும் மொபைல் போனிலேயே வீடியோக்களை எடுக்க ஆரம்பித்ததை பார்த்து ஷாக்கான நடிகர் சூர்யா இப்போதெல்லாம் யாரும் கேமரா எடுத்து வருவதில்லையா? எல்லாமே மொபைலிலேயே வந்திடுச்சா எனக் கேட்டுக் கொண்டே நிகழ்ச்சிக்கு வந்தார்.
காசுக்கு ஆசைப்படாதவர் அப்பா: நடிகர் கார்த்தி பேசும் போது, தனக்கு 2 வயசு இருக்கும் போதே கல்விக்கான அறக்கட்டளையை ஆரம்பித்து அப்போதிருந்தே அப்பா இதை நடத்தி வருகிறார் என்று அதன் 45வது ஆண்டு விழாவில் பேசினார். ஒரு படத்துக்காக வாங்கிய ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்தை அப்போதே அப்படியே இந்த அறக்கட்டளைக்காக வங்கியில் போட்டு அதனை நடத்தி வருகிறார் என்றார். பல வருடங்களுக்கு முன்பாக தங்கம் ஒரு சவரன் 750 ரூபாய் விற்றுக் கொண்டிருந்த போது, முதல் பரிசாக மாணவர்களுக்கு 1000 ரூபாயும், 2வது பரிசாக 750 ரூபாயும், 3வது பரிசாக 500 ரூபாயும் வழங்கினார் என்றார்.
எதுக்குமே உதவாம இருந்தேன்: இறுதியாக நடிகர் சூர்யா பேசும் போது, கார்த்தி சொன்னதை போல ஆரம்பத்தில் நான் எதுக்குமே உதவாம இருந்தேன். ஒரு கார்மெண்ட் கம்பெனியில வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால், அதிலும் விருப்பமில்லாமல் இருந்தேன். சினிமாவுக்கு வருவேன், கேமரா முன்பு நிற்பேன் என கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவில்லை. திடீரென அப்படியொரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன். எதுவுமே தெரியாமல் கடைசியில் இருந்தால் கூட, போராடினால் முன்னேற முடியும் என்பதை கற்றுக் கொண்டேன். இன்றைக்கும் தமிழ்நாட்டில் முதல் முறை பட்டதாரிகள் இருக்கத்தான் செய்கின்றனர். கல்வி தான் நம்மை அடுத்த இடத்திற்கு கொண்டு செல்லும், அதை விட்டு விடாதீங்க என சூர்யா செம எமோஷனலாகவும் மோடிவேஷன் அளிக்கும் விதமாக பேசினார்.


Click it and Unblock the Notifications











