வணங்கான் வந்துட்டு இருக்குன்னு சொன்னாரே பாலா.. அதிரடியாக விலகிய சூர்யா.. என்ன ஆச்சு?
சென்னை: சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரமை வைத்து பாலா இயக்கிய வர்மா திரைப்படம் நல்லாவே இல்லை எனக் கூறி ஆதித்ய வர்மா என கிரிசாயா இயக்கத்தில் மறுபடியும் அர்ஜுன் ரெட்டியை ரீமேக் செய்து துருவ் விக்ரம் நடித்து இருந்தார்.
அதன் பிறகு இயக்குநர் பாலாவின் மார்க்கெட் மொத்தமும் காலியான நிலையில், சூர்யாவின் தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு படம் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
பாலாவின் கோரிக்கையை ஏற்று சூர்யாவே 'வணங்கான்' படத்தில் நடித்து வந்த நிலையில், தற்போது அதிரடியாக வெளியேறி உள்ளார் சூர்யா.

பாலாவுக்கு என்ன ஆச்சு
தமிழ் சினிமாவின் தேசிய விருது இயக்குநர் என ஒரு காலத்தில் கொண்டாடப்பட்டு வந்தவர் தான் இயக்குநர் பாலா. சேது, பிதாமகன், நந்தா, நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தார தப்பட்டை போன்ற பல வித்தியாசமான படங்களை கொடுத்து வந்த இயக்குநர் பாலாவுக்கு சமீப காலமாக என்ன ஆச்சு? என ஒட்டுமொத்த திரையுலகமே கேள்வி கேட்கும் அளவுக்கு டோட்டலாக சேஞ்ச் ஆகி விட்டார்.

வச்சு செய்த வர்மா
பெரிய நடிகர்கள் பாலா இயக்கத்தில் நடிக்கவே பயந்து ஒதுங்கிய நிலையில், தனது மகன் துருவ் விக்ரமை குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் தான் குட்டுப் பட வேண்டும் என நினைத்து சியான் விக்ரம் பாலா இயக்கத்தில் அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கில் அறிமுகம் செய்ய நினைத்தார். வர்மா என்கிற தலைப்பில் பாலா எடுத்த படத்தை பார்த்து விட்டு தயாரிப்பு நிறுவனம் இந்த படமே வேண்டாம் என தூக்கி எறிந்து விட்டு, இயக்குநர் கிரிசாயா இயக்கத்தில் ஆதித்ய வர்மா படத்தை எடுத்து துருவ் விக்ரமை அறிமுகம் செய்தனர்.

தலை கொடுத்த சூர்யா
வேலியில் போகும் ஓணானை வேட்டிக்குள் விட்டுக் கொண்ட கதையாக இயக்குநர் பாலாவுக்கு ஆதரவு தந்தார் நடிகர் சூர்யா. தனது 2டி நிறுவனம் தயாரிப்பில் வணங்கான் படத்தை ஆரம்பித்து அதில், தானே நடிக்கவும் ஒப்புக் கொண்டார். ஆனால், ஷூட்டிங் ஸ்பாட்டில் சூர்யாவை ஓட விட்டதாக கிளம்பிய பஞ்சாயத்து காரணமாக இருவருக்கும் மோதல் ஏற்பட்டு அந்த படம் பாதியில் நிறுத்தப்பட்டது.

முற்றிய மோதல்
ஆனால், அவை எல்லாம் வதந்தி எங்களுக்குள் எந்த மனக்கசப்பும் இல்லை என சூர்யாவும் பாலாவும் சொல்லி மீண்டும் வணங்கான் பட ஷூட்டிங்கை ஆரம்பித்தனர். ஆனால், மறுபடியும் ஏற்பட்ட சிக்கல் காரணமாக சூர்யா 42 படத்தை இயக்க சிறுத்தை சிவாவுக்கு பச்சைக் கொடி காட்டி விட்டார் சூர்யா.

வணங்கான் வந்துட்டு இருக்கு
சமீபத்தில் ஒரு சினிமா விழாவில் பாலாவை அடையாளம் கண்டு கொண்ட செய்தியாளர்கள் சார்.. வணங்கான் படம் டிராப் ஆகிடுச்சா என கேட்க, அதெல்லாம் இல்லப்பா வணங்கான் வந்துட்டு இருக்கு என்றார். இந்நிலையில், இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் இயக்குநர் பாலா.

சூர்யா விலகல்
வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகிவிட்டதாக தற்போது பாலா வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த அறிக்கையில், "என் தம்பி சூர்யாவுடன் இணைந்து வணங்கான் என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால், கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால் இந்த கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது.

தர்ம சங்கடம்
என் மீதும் இந்தக் கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்ம சங்கடம் கூட நின்று விடக்கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது.

வணங்கான் டிராப் இல்லை
எனது வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக் கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி ஒருமனதாக முடிவு எடுத்திருக்கிறோம். ஆனால் அவருக்கு மிகவும் வருத்தம் தான் என்றாலும் அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது. நந்தாவில் நான் பார்த்த சூர்யா, பிதாமகனில் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம் மற்றபடி வணங்கான் தொடரும்" என பாலா அறிவித்துள்ள நிலையில், சூர்யாவுக்கு பதில் யார் வணங்கானாக நடிக்கப் போகிறார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

2டி நிறுவனமும் விலகல்
"பாலா அண்ணாவின் உணர்வுகளுக்கும் முடிவுகளுக்கும் மதிப்பளித்து நடிகர் சூர்யாவும் #2DEntertainment நிறுவனமும் #வணங்கான்-ல் இருந்து விலகிக்கொள்கிறோம். எப்போதும் பாலா அண்ணா உடன் துணை நிற்போம்." என 2டி நிறுவனமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.


Click it and Unblock the Notifications











