Suriya - என்னது புறநானூறு படம் ட்ராப்பா?.. சூர்யா வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் மகிழ்ச்சி
சென்னை: சூர்யா இப்போது கங்குவா படத்தில் நடித்து முடித்திருக்கிறார். படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகவிருக்கிறது. இதற்கிடையே அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும், சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்திலும் நடிக்க கமிட்டானார். இரண்டு படங்களின் அறிவிப்பு வெளியானாலும் படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படாமல் இருக்கிறது. இவற்றில் வாடிவாசல் படத்தின் நிலை என்னவென்று தெரியாத நிலையில் புறநானூறு படம் ட்ராப் ஆகிவிட்டதாக தகவல் வெளியானது. இந்தச் சூழலில் சூர்யா புறநானூறு பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
கோலிவுட்டின் டாப் நடிகர்களில் ஒருவர் சூர்யா. அவரது நடிப்பில் கடைசியாக எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியானது. அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அந்தப் படத்துக்கு பிறகு பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடிக்க கமிட்டான சூர்யா; சில காரணங்களால் அதிலிருந்து விலகினார். தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்தார். படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து இன்று மாலை டீசர் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

கங்குவா எப்போ ரிலீஸ்: இன்று மாலை வெளியாகும் கங்குவா டீசரில் படத்தின் ரிலீஸ் தேதியும் இடம்பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அநேகமாக செப்டம்பர் மாதத்தில் படம் ரிலீஸாகலாம் என்று தெரிகிறது. பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகவிருப்பதாகவும்; மொத்தம் இரண்டு பாகங்களாக படம் வரும் என்றும் கூறப்படுகிறது. சூர்யாவின் கரியரிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் கங்குவாதான். படத்தை ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார்.
அடுத்தடுத்த படங்கள்: இதற்கிடையே வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் கமிட்டானார். படத்தின் ஷூட்டிங் தொடங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அப்படத்தின் நிலை இப்போது என்னவென்றே தெரியாமல் இருக்கிறது. அதேசமயம் படம் ட்ராப் செய்யப்பட்டுவிட்டதாகவும் அதில் தனுஷோ அல்லது சூரியோ நடிக்கலாம் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாமல் இருக்கிறது. வாடிவாசல் படம் ட்ராப்பாகிவிடக்கூடாது என்பதுதான் சூர்யா ரசிகர்களின் விருப்பம்.
புறநானூறு: கங்குவா படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் நடிக்க கமிட்டானார். ஏற்கனவே இவர்கள் இரண்டு பேரும் இணைந்து சூரரைப்போற்று படத்தின் மூலம் கவனம் ஈர்த்திருக்கின்றனர். இரண்டு பேரும் அந்தப் படத்துக்காக தேசிய விருதையும் பெற்றனர். அதனால் கண்டிப்பாக இந்தப் படத்திலும் இரண்டு பேரும் தரமான சம்பவம் செய்வார்கள் என்று கோலிவுட் எதிர்பார்த்திருக்கிறது. இதில் சூர்யாவுடன் துல்கர் சல்மானும் நடிக்கவிருக்கிறார்.
படம் ட்ராப்பா?: படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டாலும் வாடிவாசல் போலவே இப்படத்துக்கும் ஷூட்டிங் தொடங்காமல் இருக்கிறது. அதன் காரணமாக இப்படமும் ட்ராப்பாகிவிட்டதாக சில நாட்களாகவே தகவல்கள் கசிந்தன. இந்நிலையில் சூர்யா இதுகுறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "புறநானூறு படத்துக்காக இன்னும் நேரம் தேவைப்படுகிறது. இந்தக் கூட்டணி ரொம்பவே ஸ்பெஷலானது. இதயத்துக்கு மிகவும் நெருக்கமானது. எங்களின் பெஸ்ட்டை இந்தப் படத்தில் கொடுக்க விரும்புகிறோம். விரைவில் இப்படத்தை தொடங்குவோம்" என்று குறிப்பிட்டிருக்கிறார். சூர்யாவின் அறிக்கையால் புறநானூறு ட்ராப் இல்லை என்பது உறுதியாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











