சூர்யாவின் 50வது பிறந்த நாள்.. நலத்திட்ட உதவிகளை இப்போதே தொடங்கிய ரசிகர்கள்!
சென்னை: தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகத் திகழும் சூர்யா, தனது நடிப்புத் திறமையால் மட்டுமல்லாமல், மக்களுக்கு அவர் செய்யும் உதவிகள் மூலமாகவும் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து வருகிறார். கல்வி, சுகாதாரம், சமூக நலன் என அவர் முன்னெடுத்துச் செல்லும் பல்வேறு முயற்சிகள் அவரை மனிதநேயமிக்கவராக எடுத்துக்காட்டுகின்றன. இந்நிலையில் வரும் புதன்கிழமை அதாவது ஜூலை 23ஆம் தேதி சூர்யா தனது 50வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இந்நிலையில் அவரது ரசிகர்கள் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்யத் தொடங்கியுள்ளார்கள்.
சூர்யா நடிப்பைக் கடந்து சமூக நலனுக்காக செய்யும் மிக முக்கியமான பங்களிப்பாக அகரம் அறக்கட்டளை விளங்குகிறது. 2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளை, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை வழங்கி வருகிறது. "கல்வியால் உயர்ந்திடு" என்ற குறிக்கோளுடன் இயங்கும் இந்த அறக்கட்டளை, பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்களுக்கு கல்லூரிக் கல்வி, தொழிற் பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் ஆகியவற்றை வழங்கி அவர்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கிறது.
கொரோனா தொற்று பரவிய காலகட்டத்தில், அகரம் அறக்கட்டளை மூலம் சூர்யா சுமார் 3.5 கோடி ரூபாய் நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மாணவர்களின் கல்வியைத் தொடர பெரிதும் உதவியது. தகுதியான மாணவர்களுக்கு விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டு, அவர்களின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்ய நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.

எமோஷனலான சூர்யா: அகரம் அறக்கட்டளையின் அலுவலகத்தில் நடந்த விழாவில் பேசிய சூர்யா, "நீங்கள் ( ரசிகர்கள்) எனக்குக் கொடுத்த வருமானத்தின் மூலமாக உருவான இடம் இது!" என்று உணர்ச்சிப்பூர்வமாகக் பேசினார். இது, ரசிகர்கள் தனக்கு அளித்த ஆதரவை சமூக நலனுக்காகப் பயன்படுத்துவதற்கு ஒரு சிறந்த உதாரணமாக அமைந்தது.
உதவிகள்: திரையுலகில் பணியாற்றும் ஸ்டண்ட் கலைஞர்களின் நலனுக்காகவும் சூர்யா குறிப்பிடத்தக்க உதவிகளைச் செய்து வருகிறார். கடந்த பத்து வருடங்களாக, ஸ்டண்ட் கலைஞர்களுக்கு காப்பீட்டுத் திட்டங்களுக்காக முழுத் தொகையையும் சூர்யா செலுத்தி வருகிறார். இது குறித்து ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா வெளியில் கூறும் வரை பலருக்குமே தெரியாமல் தான் இருந்தது. இது தொடர்பாக அண்மையில் கூட செய்திகள் பரவலாக பரவின. சூர்யா மக்களுக்காகவும், மாணவர்களுக்காகவும், திரைக்கலைஞர்களுக்காவும் தொடர்ந்து உதவி வருகிறார்.
நலத்திட்ட உதவிகள்: சூர்யா வரும் புதன்கிழமை அதாவது ஜூலை 23ஆம் தேதி 50-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர் மன்றமான சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக, வடசென்னை தெற்கு மாவட்டத்தில் சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர். அதில் தையல் இயந்திரங்கள், 150 நபர்களுக்கு புடவைகள், 150 நபர்களுக்கு வேட்டிகள், மற்றும் 150 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ஆகியவை வழங்கப்பட்டன. சூர்யாவின் பிறந்த நாளை சமூக நலத்துடன் கொண்டாட வேண்டும் என்ற அவரது விருப்பத்தை தொடர்ந்து ரசிகர்கள் இவ்வாறு உதவி வருகிறார்கள். இதனைப் பார்த்த பலரும் சூர்யாவே மக்களுக்காக அள்ளி அள்ளிக் கொடுப்பவர், அவரது ரசிகர்கள் மட்டும் சும்மா இருப்பார்களா என பேசி வருகிறார்கள். சூர்யா தற்போது கருப்பு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் அப்டேட் அவரது பிறந்த நாளில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











