பாலா மீது கேஸ் போடலாம்னு இருக்கேன்! சூர்யாவை வைத்து என்னை டேமேஜ் செய்துவிட்டார்.. சிவக்குமார் ஆதங்கம்
சென்னை: இயக்குநர் பாலா தமிழ் சினிமாவில் இயக்குநர் அவதாரம் எடுத்து கடந்த 10ஆம் தேதியோடு, 25ஆண்டுகள் ஆகின்றது. இவரது இயக்கத்தில் ஒரு படம் ரிலீஸ் ஆகின்றது என்றாலே, தமிழ் சினிமாவைக் கடந்து பல மாநிலங்களில் உள்ள உலக சினிமா ரசிகர்களும் படத்தை உன்னிப்பாக கவனிக்கும் அளவிற்கு தரமான படங்களைக் கொடுப்பவர் பாலா. இவரது இயக்கத்தில் வரும் தைப் பொங்கலுக்கு அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள, வணங்கான் படம் ரிலீஸ் ஆகவுள்ளது. வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் சிவக்குமார் எழுப்பிய கேள்விகளுக்கு பாலாவின் பதில் பலரது கவனத்தினை ஈர்த்தது.
பாலாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள வணங்கான் படத்தினை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தம் ஆகி, அதன் பின்னர் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டவர் நடிகர் சூர்யா. அதன் பின்னர், சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே சில கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், சூர்யா வணங்கான் படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தினாலும், அதன் பின்னர் வணங்கான் படத்தில் அருண் விஜய் கமிட் ஆகி நடித்தார். படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது.

வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழாவும், பாலா 25 விழாவும் ஒருசேர நடத்தினார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. இந்த நிகழ்ச்சியில் சூர்யா, அவரது தந்தை சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாலாவின் முதல் படமான சேது படத்தில் விக்ரமின் அண்ணனாக சிவக்குமார் நடித்திருப்பார். பாலா 25 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சிவக்குமார், பாலாவை பேட்டி எடுத்தார். அப்போது அவர் எழுப்பிய கேள்வியும் அதற்கு பாலா அளித்த பதிலும் பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

சிவக்குமார்: சிவக்குமார் கேட்கும்போது, " நான் 1972இல் காரைக்கால் அம்மையார் என்ற படத்தில் நடித்தேன். அந்தப் படத்தினை ஏ.பி. நாகராஜன் எடுத்தார். அந்தப் படத்தில் காரைக்கால் அம்மையாராக கே.பி. சுந்தராம்பாள் அம்மையார் நடித்தார். கண்ணதாசன் பாடல் எழுதி, அந்த அம்மையார் பாடி, நானும் ஸ்ரீவித்யாவும் ஆடிய பாடல் அசாத்தியமான பாடல். இன்றைக்கும் இணையத்தில் ' தக தக தக வென ஆடவா' எனத் தேடினால் அந்தப் பாடல் வந்துவிடும்.

சூர்யா: அந்தப் பாடலில் நான் உயிரைக் கொடுத்து ஆடியுள்ளேன். ஆனால் பிதாமகன் படத்தில் அந்த பாடலுக்கு சூர்யாவையும், சிம்ரனையும் ஆடவைத்து கிண்டல் செய்துவிட்டார் பாலா. உண்மையைச் சொல்லுங்கள் பாலா, நையாண்டிக்காக அதைச் செய்தீர்களா? என்னை மானபங்கம் செய்யவேண்டும் என அதைச் செய்தீர்களா? என சிவக்குமார் கேட்டார்.

பாலா மீது வழக்கு: உடனே பாலா, ' பார்க்கவே உங்களது ஆட்டமும், உடன் ஆடும் மற்றவர்களின் ஆட்டமும் நகைச்சுவையாக இருந்தது' எனக் கூறினார். இதனால் அரங்கமே கைதட்டிச் சிரித்தது. இதைக் கேட்ட சிவக்குமார், அடப்பாவி, உலகம் முழுவதும் கொண்டாடிய அந்த நடனம் நகைச்சுவையாக இருந்துச்சா? உன்மீது கேஸ் போடப்போகின்றேன். என்னையா இப்படிச் சொல்லுறான்? என சிவக்குமார் சிரித்தபடியே கூறினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.



Click it and Unblock the Notifications











