டைரக்டர் கே.வி.ஆனந்த்திற்கு இறுதி வரை துணை நின்ற சூர்யா
சென்னை : நடிகர் விவேக் இறந்த அதிர்ச்சி மற்றும் சோகத்தில் இருந்து தமிழ் சினிமா உலகம் மீண்டு வராத நிலையில், மற்றொரு பேரதிர்ச்சியாக டைரக்டரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவரது மறைவிற்கு திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கே.வி.ஆனந்த், அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இவர்கள் அனைவரும் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு இருந்துள்ளனர். இந்நிலையில் கே.வி.ஆனந்த்திற்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதை அடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆம்புலன்சில் வைத்தே அஞ்சலி
அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3.30 மணியளவில் கே.வி.ஆனந்த் உயிரிழந்தார். கொரோனா தொற்றால் உயிரிழந்ததால் கே.வி.ஆனந்த்தின் உடல் குடும்பத்தினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. மாறாக ஆம்புலன்ஸ் மூலம் அடையாறில் உள்ள கே.வி.ஆனந்த்தின் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட அவரது உடலுக்கு, ஆம்புலன்சில் வைத்தே குடும்பத்தினர்கள் அஞ்சலி செலுத்தினர்.

யாரும் வர வேண்டாம்
இறுதிச் சடங்குகள் உடனடியாக முடிக்கப்பட்டு, பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, தகனம் செய்யப்பட்டது. கொரோனாவால் கே.வி.ஆனந்த் உயிரிழந்ததால் யாரும் நேரில் அஞ்சலி செலுத்த வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

ஓடி சென்று உதவிய சூர்யா
முன்னதாக கே.வி.ஆனந்த் உயிரிழந்த தகவல் தெரிந்ததும், அவரது நண்பரும் நடிகருமான சூர்யா, மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார். மருத்துவமனை நடைமுறைகள் அனைத்தையும் முடித்து, கே.வி.ஆனந்த்தின் உடலை வீட்டிற்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.

சூர்யாவை இயக்க நினைத்த கே.வி.ஆனந்த்
சூர்யா, கே.வி.ஆனந்த்தின் பல படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளார். கே.வி.ஆனந்த் இயக்கிய அயன், மாற்றான், காப்பான் படங்களில் சூர்யா நடித்துள்ளார். இந்த படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன. கடைசியாக, சூர்யாவை வைத்து நான்காவதாக ஒரு படம் இயக்க கே.வி.ஆனந்த் முடிவு செய்திருந்தார். இது பற்றி இருவரும் ஆலோசித்து வந்ததாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











