மனோஜ் பாரதிராஜா உயிரிழப்பு.. நேரில் அஞ்சலி செலுத்திய சூர்யா.. பாரதிராஜா கையை பிடித்துக் கொண்டு ஆறுதல்
சென்னை: பாரதிராஜாவின் மகன் மனோஜ் நேற்று மாலை உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு தமிழ் திரையுலகத்தினரிடமும், ரசிகர்களிடமும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவருக்கு பலரும் தங்களது அஞ்சலியை நேரில் வந்து செலுத்திவருகிறார்கள். இந்தச் சூழலில் நடிகர் சூர்யா இன்று நேரில் சென்று மனோஜுக்கு அஞ்சலி செலுத்தினார். முன்னதாக அவரது சகோதரர் கார்த்தி நேற்று இரவு நேரில் வந்து அஞ்சலி செலுத்திவிட்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் பாரதிராஜாவின் மகனான மனோஜ் தமிழ் திரைத்துறையில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவராக இருந்தவர். பெரிய வெற்றி எதுவும் அவருக்கு கிடைக்காவிட்டாலும் தொடர்ந்து சினிமாவில் இயங்கிவந்தார். எப்படியாவது தனக்கான தனித்த அடையாளத்தை பெற்றுவிட வேண்டுமென்பதில் மிகவும் உறுதியாக இருந்தார் அவர். பாரதிராஜாவும் அதற்கான பல ஏற்பாடுகளை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது மகனை வைத்து இரண்டு படங்களை இயக்கினார் பாரதிராஜா.
ஆனால் முடியவில்லை: ஆனால் எத்தனையோ பேரை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்து; நடிகர், நடிகையாக்கி வாழ்க்கையை செட்டில் செய்த பாரதிராஜாவால் தனது மகனுக்கு ஒரு ஹிட் படத்தை கொடுக்க முடியவில்லை. மனோஜும் தனியாக முயற்சித்த நடித்த படங்கள் எதுவும் கைகொடுக்கவில்லை. இதன் காரணமாக அவரது சகாப்தம் முடிந்துவிட்டதாகத்தான் பலரும் பேசினார்கள். ஆனால் ஹீரோவாக வெல்ல முடியாவிட்டால் என்ன கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக வெல்வேன் என்று சொல்லி குணசித்திர வேடங்களை ஏற்றார் அவர்.

இயக்குநர் மனோஜ்: அதன்படி ஈஸ்வரன்,கொம்பன், மாநாடு என பல படங்களில் கேரக்டர் ரோலை ஏற்றார். அதில் தனது திறமையை நன்றாகவே வெளிப்படுத்தினார். இதன் காரணமாக பாரதிராஜாவின் வாரிசு சினிமாவில் கண்டிப்பாக வெல்லும் என்கிற நம்பிக்கை அனைவருக்கும் பிறந்தது. சூழல் இப்படி இருக்க மார்கழி திங்கள் என்கிற படத்தையும் இயக்கினார். அந்தப் படத்தில் பாரதிராஜாவும் முக்கியமான வேடத்தை ஏற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்த மனோஜ்: ஆனால் அந்தப் படம் சரியாக போகவில்லை. இப்படிப்பட்ட சூழலில் சில நாட்களுக்கு முன்பு அவருக்கு இதய அறுவை சிகிச்சை சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் தனது வீட்டில் ஓய்விலிருந்தார். ஆனால் நேற்று அவருக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக உயிரிழந்தார். அவரது உடல் நீலாங்கரையில் இருக்கும் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இன்று மாலை இறுதி சடங்கு நடக்கிறது.
அஞ்சலி செலுத்திய சூர்யா: அவரது உடலுக்கு பலரும் தங்களது அஞ்சலியை செலுத்திவருகிறார்கள். திரையுலகத்தை சேர்ந்த அத்தனை பேரும் வீட்டுக்கு வந்து பாரதிராஜாவுக்கு ஆறுதல் தெரிவித்து மனோஜுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். அந்தவகையில் நடிகர் சூர்யா தற்போது நேரில் வந்து மனோஜுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் பாரதிராஜாவுக்கும் தனது ஆறுதலை தெரிவித்தார். முன்னதாக சூர்யாவின் சகோதரர் கார்த்தி நேற்று இரவே நேரில் அஞ்சலி செலுத்திவிட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இறுதி சடங்கு; என்ன காரணம்?: முதலில் மனோஜின் உடலை அவர் பிறந்த ஊரான அல்லிநகரத்துக்கு எடுத்து செல்வதாக இருந்தார்கள். ஆனால் திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் என பலர் வருவது வசதியாக இருக்காது என்று குடும்பத்தினர் நினைத்தார்கள். அதன் காரணமாக நீலாங்கரையில் விஜய் வீட்டின் அருகே இருக்கும் மனோஜ் வீட்டிலேயே இறுதி அஞ்சலிக்கான ஏற்பாடு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பெசன்ட் நகர் மின் மயானத்தில் இறுதி சடங்கு நடக்கவிருக்கிறது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











