என்ன சொல்றீங்க.. அமேசான் பிரைமுக்கு அல்வா கொடுக்க சூர்யா முடிவா? எல்லாம் அந்த காரணத்துக்காகவா?
சென்னை: அமேசான் பிரைமில் சூரரைப் போற்று ரிலீஸ் செய்யப்படும் என்ற முடிவை நடிகர் சூர்யா மறு பரிசீலனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தியேட்டர்கள் திறக்கப்படாததன் காரணத்தால், ஏகப்பட்ட திரைப்படங்கள் ரிலீஸ் செய்ய முடியாமல் காத்துக் கிடக்கின்றன.
சில திரைப்படங்கள் ஒடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன.

தோல்வியடைகின்றன
ஆனால், இதுவரை ஒடிடி தளங்களில் வெளியான எந்தவொரு படமும் வெற்றியை பெற்றதாக தகவல் இல்லை. அதிலும், அந்த அமேசான் பிரைமில் வெளியான படங்கள் படு தோல்வியை சந்தித்து வருகின்றன. 200 நாடுகளில் ஒரே நேரத்தில் ரிலீஸ் எனும் மாயை தான் பல பெரிய நடிகர்களையும் அதன் வலையில் விழ வைக்கின்றன.

ஜோதிகா படம்
சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜான், பிரதாப் போத்தன், தியாகராஜன் என மல்டி ஸ்டார் நடிப்பில் வெளியான பொன்மகள் வந்தாள் படம் அமேசான் பிரைமில் வெளியானது. ஆனால், அந்த படம் வெளியான வேகத்தில் கலவையான விமர்சனங்களை சந்தித்து காணாமல் போனது.

பெண்குயின்
ஜோதிகாவை தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷின் பெண்குயின் படம் ரிலீசானது. கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் தயாரிப்பில் வெளியான அந்த படத்தை பார்க்கவே முடியவில்லை என பலரும் இன்டர்நெட் கனெக்ஷனையே ஹாஃப் செய்து வைத்து விட்டனர். அந்த அளவுக்கு படு தோல்வியை அந்த படம் சந்தித்தது.

தமிழில் மட்டுமல்ல
தமிழ் மொழியில் மட்டுமல்ல அமேசான் பிரைமில் பாலிவுட்டில் வெளியான அமிதாப் பச்சனின் குலாபோ சிட்டாபோ, சகுந்தலா தேவி, மற்ற மொழிகளில் வெளியான ஏகப்பட்ட ஒடிடி படங்கள் மண்ணைக் கவ்வின. அமேசான் பிரைமில் மட்டுமின்றி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான ஆலியா பட்டின் சடக் 2 படமும் படுதோல்வியை சந்தித்தது.

நானியின் 25வது படம்
நடிகர் நானியின் 25வது படம் என்கிற பில்டப்புடன் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் சமீபத்தில் வெளியான V படமும் அட்டு ஃபிளாப் ஆகி உள்ளது. தியேட்டர் ஓனர்களின் சாபமா? அல்லது மொக்கை படங்களை தான் ஒடிடி தளங்களில் வெளியிட நடிகர்கள் முன் வருகின்றனரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அடுத்த ஆப்பு
அமேசான் பிரைமில் வெளியான எந்தவொரு படமும் பார்க்கவே முடியாத படி உள்ளதாகவும், பார்க்க முடியாத படங்களை தான் அமேசான் பிரைமில் வெளியிடுகின்றனர் என்றும், அப்போ நம்ம சூர்யாவின் சூரரைப் போற்று படமும் அப்படித் தான் இருக்குமா? என ஏகப்பட்ட ட்ரோல்களை மற்ற நடிகர்களின் ரசிகர்கள் மீம்களாக போட்டு கலாய்த்து வருகின்றனர்.

விலக முடிவு
இதன் காரணமாக தற்போது ஒடிடி ரிலீஸில் இருந்து சூரரைப் போற்று படத்தை மாற்ற நடிகர் சூர்யா மறு பரிசீலனை செய்து வருவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. மேலும், அக்டோபர் மாதம் தியேட்டர்கள் திறக்க ஆரம்பித்தால், முதல் படமாக சூர்யாவின் சூரரைப் போற்று ரிலீஸ் செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதே காரணத்திற்காக
இயக்குநர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில், நடிகர் அக்ஷய் குமார், கியாரா அத்வானி நடிப்பில் உருவாகி உள்ள பிரம்மாண்ட படமான லக்ஷ்மி பாம் திரைப்படமும் இதே காரணத்திற்காகத் தான் ஒடிடி ரிலீஸில் இருந்து பின் வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. நடிகர் சூர்யாவும் இதை பின் தொடர்வாரா? அல்லது அமேசான் பிரைமுக்கு படத்தை விற்று விட்டதால் அதே முடிவை தொடர்வாரா? என்பது சீக்கிரமே தெரிந்து விடும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











