நெஞ்சைத் தட்டி நியாயம் கேட்கிற படம்.. விஜய்சேதுபதியின் க/பெ. ரணசிங்கம் படத்தை பாராட்டிய சூர்யா!
சென்னை: இயக்குநர் விருமாண்டி இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள க/பெ. ரணசிங்கம் படத்தை நடிகர் சூர்யா பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.
Recommended Video
விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், முனிஷ்காந்த், பவானிஸ்ரீ உள்ளிட்டோர் நடிப்பில் ஜி சினி பிளெக்ஸ் ஒடிடி தளத்தில் இந்த படம் வெளியாகி உள்ளது.
ப்ளூ சட்டை மாறன் படத்தை சுமார் படம் என கழுவி ஊற்றியது சினிமா வட்டாரத்தில் சர்ச்சையை கிளப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

நெஞ்சை உருக்கும் கதை
வெளிநாட்டில் வேலைக்கும் செல்பவர்கள் மர்மமாக மரணிப்பதும், அவர்களது உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு வருவதில் ஏற்படும் சிக்கல்களையும் அப்பட்டமாக இந்த படம் தோலுரித்துக் காட்டி இருக்கிறது. இறந்த கணவரின் உடலை மீட்க வேண்டும் என கை குழந்தையுடன் ஒரு பெண் போராடுவதே க/பெ. ரணசிங்கம் படத்தின் நெஞ்சை உருக்கும் கதை.

மக்கள் பாராட்டு
சமீப காலமாக ஒடிடியில் வெளியான பல படங்கள் மக்களின் அங்கீகாரத்தை பெறாத நிலையில், முதன்முறையாக விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகி உள்ள க/பெ. ரணசிங்கம் படம் மக்கள் மனங்களை வென்றுள்ளது. விமர்சகர்கள் எனும் பேர் வழியில் சிலர் சொல்வதை கேட்காமல், படத்தை பார்க்கலாம் என மக்கள் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ப்ளூசட்டை மாறன்
இயக்குநர் விருமாண்டி இயக்கத்தில் உருவாகி உள்ள க/பெ. ரணசிங்கம் படத்தில் சொல்ல வந்த கருத்தை உள்வாங்கிக் கொள்ளாமல், ப்ளூசட்டை மாறன் விமர்சித்துள்ளது பலரையும் அப்செட் ஆக்கி உள்ளது. வெளிநாட்டு பிரச்சனையை அவர் ஏன் விளக்க வில்லை என்றால், படம் அந்த பெண்ணின் பாயின்ட் ஆஃப் வியூவில் நகர்கிறது. அவளது போராட்டம், அவளுடைய நினைவுகள் என்கிற கோணத்தில் இயக்குநர் இயக்கி உள்ளார் என்பதை புரிந்து கொண்டு இருந்தால், இப்படி மோசமான விமர்சனத்தை வைத்திருக்க மாட்டார் என நெட்டிசன்கள் அவரது வீடியோவுக்கு கீழே கழுவி ஊற்றுகின்றனர்.

சூர்யா பாராட்டு
இந்நிலையில், க/பெ. ரணசிங்கம் படத்தை பாராட்டி நடிகர் சூர்யா ஒரு ட்வீட் போட்டுள்ளார். "அடித்தட்டு மக்களின் இயலாமையை, வறுமையை, வெளிநாடு போய் படும் நெருக்கடியை, நெஞ்சைத் தட்டி நியாயம் கேட்கிற படம் க/பெ. ரணசிங்கம். இயக்குநர் விருமாண்டி மற்றும் படக்குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் என பதிவிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பு அபாரம்
க/பெ. ரணசிங்கம் படத்தில் நடிகர் விஜய்சேதுபதிக்கு நிகராக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து அசத்தி உள்ளார். அரியநாச்சி கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். அதிலும், ஐஸ்வர்யா ராஜேஷ் கிளைமேக்ஸில் சொல்லும் அந்த வசனத்தை பலரும் கமெண்ட்டில் பதிவிட்டு, மக்களுக்கு பணியாற்றாமல் ஏமாற்றும் அதிகாரிகளை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

அடுத்து நம்ம படம் வருது
மேலும், சூர்யா ரசிகர்கள், தலைவா, அடுத்து நம்ம படம் வருது.. என சூரரைப் போற்று படத்தின் ரிலீஸ் குறித்தும் மாறாவாக சூர்யாவை பார்க்கப் போகும் ஆவலையும் வெளிப்படுத்தியும் கமெண்ட் செய்து வருகின்றனர். க/பெ. ரணசிங்கம் படத்தை பைரசியாக பார்க்காமல் ஜி பிளெக்ஸில் பாருங்க என்கிற கோரிக்கையையும் முன் வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











