அஞ்சான் பட ரீ ரிலீஸ்.. உச்சக்கட்ட சந்தோஷத்தில் லிங்குசாமி.. ஞாயிறு வரை ஹவுஸ்ஃபுல்.. வேற லெவல்
சென்னை: சூர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் உருவான அஞ்சான் திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு ரிலீஸானது. அந்த சமயத்தில் பெரிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்த படம் அது. முக்கியமாக, 'கற்றுக்கொண்ட மொத்த வித்தையையும் இதில் இறக்கியிருக்கிறேன்' என லிங்குசாமி சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் படம் ரிலீஸாகி தோல்வியடைந்தது மட்டுமின்றி கடும் ட்ரோலை சந்தித்தது. இந்நிலையில் நேற்று படம் ரீ ரிலீஸானது.
ஆனந்தம், ரன், சண்டக்கோழி என பீக்கில் சென்றுகொண்டிருந்த லிங்குசாமி; சூர்யாவை வைத்து அஞ்சான் படத்தை இயக்கினார். சந்தோஷ் சிவன் கேமரா, யுவன் ஷங்கர் ராஜா இசை என பலமான கூட்டணியோடு களமிறங்கிய அவர்; ஓவர் கான்ஃபிடென்ஸாகவே இருந்தார். அதுமட்டுமின்றி படத்தில் சூர்யாவின் கெட்டப்பும் அட்டகாசமாக இருக்க படத்தின் மீது ஒட்டுமொத்த திரைத்துறையுமே எதிர்பார்ப்பை அதிகம் வைத்துவிட்டது.
கற்றுக்கொண்ட வித்தைகள்: அதுமட்டுமின்றி படத்தின் ப்ரோமோஷனில் பேசியிருந்த இயக்குநர்; நான் கற்றுக்கொண்ட மொத்த வித்தையையும் இந்தப் படத்தில் இறக்கியிருக்கிறேன் என்று கூறியிருந்தார். வரிசையாக ஹிட் கொடுத்த ஒரு இயக்குநர்; முதன்முறையாக அப்படி சொன்னதன் காரணமாக ஏற்கனவே அதிகரித்திருந்த எதிர்பார்ப்பு விண்ணளவு உயர்ந்தது. இப்படி எக்கச்சக்க ஹைப்புகளோடு கடந்த 2014ஆம் ஆண்டு படம் ரிலீஸானது.

விழுந்த மொரட்டு அடி: ஆனால் படம் பார்த்த ரசிகர்களுக்கு முழு திருப்தியும் கிடைக்கவில்லை. அந்த சமயத்தில்தான் சோஷியல் மீடியாக்களும் பெருகிவந்த காலகட்டம். படம் கொடுத்த ஏமாற்றத்தால் லிங்குசாமி கொடுத்த பேட்டியை வைத்து மொரட்டு அடி அடித்தார்கள். சோஷியல் மீடியாவில் செய்யப்பட்ட ட்ரோல் லிங்குவின் மகளே வந்து அவரிடம் கேட்கும் அளவுக்கு நிலைமையை கொண்டு சென்றது. அப்போதிருந்து இப்போதுவரை அவரால் ஒரு வெற்றி படத்தை கொடுக்க முடியவில்லை என்பது வருத்தத்துக்குரிய ஒன்று.
அஞ்சான் ரீ ரிலீஸ்: சூழல் இப்படி இருக்க அஞ்சான் படத்தை ரீ ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. முன்னர் போல் இல்லாமல் படத்தை ரீ எடிட் செய்து; 2 மணி நேரம் 36 நிமிடங்களாக இருந்த படத்தை இரண்டு மணி நேரமாக குறைத்து நேற்று வெளியிட்டார்கள். கண்டிப்பாக இந்த முறை படம் அனைவருக்குமே பிடிக்கும் என்பது இயக்குநர் மற்றும் படக்குழுவின் நம்பிக்கையாக இருந்தது. அவர்களின் நம்பிக்கைக்கு ஏற்பத்தான் நேற்று படம் பார்த்த பெரும்பாலானவர்கள் இந்தப் படத்தையே அந்த அடி அடித்தார்கள் என்று பேச தொடங்கியிருக்கிறார்கள்.
ஞாயிறுவரை ஹவுஸ்ஃபுல்: வெளியான முதல் நாளான நேற்று சொல்லிக்கொள்ளும்படியான வசூலை பெற்றிருப்பதாக தெரிகிறது. இதனால் படக்குழுவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய லிங்குசாமி, 'அஞ்சான் படத்துக்கு யூடிவி மூலமாக தனஞ்ஜெயன் சப்போர்ட் செய்தார். படத்தில் இடம்பெற்ற வசனத்துக்கு இன்று பெரிய ரெஸ்பான்ஸ் இருக்கிறது. அதை எழுதிய பிருந்தா சாரதிக்கு நன்றி. இந்தப் படத்தின் ரிசல்ட் எங்களுக்கு சந்தோஷத்தை கொடுத்தால் என்னுடைய மற்ற படங்களையும் ரீ ரிலீஸ் செய்வோம்" என்று கூறினார். அப்போது அவருக்கு அருகில் இருந்த கமலா தியேட்டர் ஓனர், 'ஞாயிற்று கிழமை வரை அஞ்சான் படம் ஹவுஸ்ஃபுல்" என்று கூறினார்.


Click it and Unblock the Notifications











