Karuppu: சூர்யாவை வைத்து TVKவுக்கு புரோமோஷன்.. கருப்பு படத்துல ஒரே விஜய் புராணமா இருக்கேப்பா?
சென்னை: சூர்யா, த்ரிஷா, RJ பாலாஜி , நட்டி நட்ராஜ், இந்திரன்ஸ் உள்ளிட்ட பலர் நடித்து உருவாகி உள்ள படம் கருப்பு. படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது, சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். மே 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவேண்டிய இந்த படம் சில காரணங்களால் மே 15ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தில் சூர்யா தான் கதாநாயகன் என்றாலும், படத்தின் முதல் பாதி, இரண்டாம் பாதி என சில பல காட்சிகளில் தமிழ்நாடு முதலமைச்சராக உள்ள நடிகர் விஜய்யின் புராணமாகத்தான் இருக்கிறதோ என்ற வாடை அடிக்காமல் இல்லை.
படத்தில் ஒரு காட்சியில் இந்திரன்ஸ் விஜய்யின் போக்கிரி படத்தின் வசனமான, "நான் ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா.. அதுக்கு அப்புறம் என் பேச்சை நானே கேட்க மாட்டேன்" என்ற டயலாக்கைக் கூறுகிறார். அதேபோல் தேர்தல் பிரசாரத்தில் விஜய் திமுகவை விமர்சித்து பாடிய பாடலான பாட்டிலுக்கு 10 ரூபாய்.. பாட்டிலுக்கு 10 ரூபாய் என்ற பாடலும் இடம் பெறுவதுடன், டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக ரூபாய் 10 வசூலிப்பது இல்லை என்று காட்டப்படுகிறது.

பாட்டிலுக்கு 10 ரூபாய்: தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர் வைத்த குற்றச்சாட்டு என்பது பலராலும் முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டு. அதேபோல் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் சில இடங்களில் பாட்டிலுக்கு ரூபாய் 10 கூடுதலாக வாங்கப்படுகிறது என்றும், கூடுதலாக பணம் வசூலிக்கப்படுவது இல்லை என்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வந்து கொண்டுள்ளது.
ஒரே விஜய் புராணம்: அதேபோல் இரண்டாம் பாதியில், லியோ படத்தின் காஃபி ஷாப் சண்டைக் காட்சிக்கு முந்தைய காட்சி இடம் பெறுகிறது. இது லாஜிக்காக கொஞ்சம் கூட ஒர்க் அவுட் ஆகாதது. காரணம் கருப்பு படத்தின் கதையானது, சென்னையில் நடைபெறுகிறது. ஆனால் லியோ படத்தின் கதைக்களம் என்பது இமாச்சல பிரதேசத்தில் நடைபெறுகிறது. விஜய் ரெஃபரன்ஸ் காட்சியை வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக திணித்து வைக்கப்பட்ட காட்சியாக இருக்கிறது. கமர்ஷியல் படத்தில் லாஜிக் பார்க்க கூடாது என்றாலும், அவரது கதைக்களத்திற்கு கொஞ்சம் உண்மைக்கு நெருக்கமான வேறு ஏதாவது ரெஃபரன்ஸ் வைத்திருக்கலாம். ஆனால் விஜய்யின் புராணத்தை பாட வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இது போன்ற காட்சிகளை எல்லாம் வைத்தாரா இயக்குநர் என்ற கேள்வி எழாமல் இல்லை.

ரசிகர்களிடையே இணக்கம்: அதேபோல் படத்தின் புரோமோசன் மேடைகளில் விஜய் புராணத்தைதான் ஆர்ஜே பாலாஜி பாடிக் கொண்டு இருந்தார். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, விஜய் முதலமைச்சர் ஆவார் என்ற நம்பிக்கை ஆர்ஜே பாலாஜிக்கு ஏற்கனவே இருந்திருக்கும் போலயே என்று விஜய் ரசிகர்கள் பலரும் பதிவிட்டு வருகிறார்கள். மேலும் ஏற்கனவே விஜய் ரசிகர்களுக்கும் சூர்யா ரசிகர்களுக்கு இடையே உள்ள மோதல் போக்கை தவிர்த்து, இணக்கமான உறவை உருவாக்க சூர்யாதான் இது போன்ற காட்சிகளை வைக்கச் சொன்னாரா என்றும் கேள்விகளை சில ரசிகர்கள் எழுப்பி வருகிறார்கள். மொத்தத்தில் படம் ரசிகர்களுக்கு பெருவாரியாக பிடித்துவிட்டது. இதனால் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது.


Click it and Unblock the Notifications