அந்த பிரச்னைதான் காரணமாம்.. 'சூரரைப் போற்று' பட ரிலீஸ் தாமதம் ஏன்? நடிகர் சூர்யா விளக்கம்!
சென்னை: சூரரைப் போற்று படத்தின் ரிலீஸ் ஏன் தாமதமாகிறது என்பது பற்றி நடிகர் சூர்யா விளக்கம் அளித்துள்ளார்.
சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் இறுதியில் முடிவடைந்தது.
சுதா கொங்கரா இயக்கியுள்ள இந்தப் படத்தில், அபர்ணா பாலமுரளி நாயகியாக நடித்துள்ளார்.

மோகன் பாபு
ஜாக்கி ஷெராப், கருணாஸ், தெலுங்கு நடிகர் மோகன் பாபு முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்துக்கு இசை அமைத்துள்ளார். படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம், சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது.

விமானத்தில் ஷூட்டிங்
விமானம் தொடர்பான கதை என்பதால், விமானத்தில் சுமார் 15 நாள் ஷூட்டிங் நடந்துள்ளது. இதற்காக தனியார் விமானம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி ஷூட்டிங் நடத்தியுள்ளனர். இந்தப் படத்தை கடந்த ஏப்ரல் இறுதி அல்லது மே மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால், கொரோனா காரணமாக ரிலீஸ் செய்ய முடியவில்லை.

அமேசான் பிரைம்
இந்நிலையில், இந்தப் படம் அமேசான் பிரைமில் வரும் 30 ஆம் தேதி வெளியாக இருப்பதாக நடிகர் சூர்யா அறிவித்திருந்தார். இந்நிலையில், அமேசான் வெளியிட்டுள்ள இந்த மாதத்துக்கான படங்கள் வெளியீட்டுப் பட்டியலில் சூரரைப் போற்று இடம்பெறவில்லை. சில தடையில்லா சான்றுகளை பெற வேண்டி இருப்பதால், படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

ரிலீஸ் தாமதம் ஏன்?
இந்நிலையில் நடிகர் சூர்யா, பட ரிலீஸில் ஏன் தாமதம் என்று விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சூரரைப் போற்று படம் விமானப் போக்குவரத்து பற்றிய கதைக்களத்தைக் கொண்டது. இந்திய விமானப்படை மற்றும் நாட்டின் பாதுகாப்பு தொடர்புடையது என்பதால், பல அனுமதிகளை பெற வேண்டி இருந்தது. இன்னும் சில என்.ஓ.சி சான்றிதழ்களுக்கு ஒப்புதல் பெற வேண்டியுள்ளது.

தவிர்க்க முடியாதது
அதனால் இந்த காத்திருப்பு தவிர்க்க முடியாததாக இருக்கிறது. தடையின்மை சான்றிதழ் பெற வேண்டி இருப்பதால் பட வெளியீடு சற்றுத் தாமதம் ஆகிறது. இது வழக்கமான நடைமுறைதான் வேறொன்றுமில்லை. கவலை வேண்டாம். சூரரைப் போற்று படம் என் இதயத்திற்கு நெருக்கமான படம். தனிப்பட்ட முறையில் என்னை மிகவும் பாதித்த கதை இது. துரதிஷ்டவசமாக சிறு தாமதம் ஆகிறது.

மாறாவின் உலகத்தில்
படம் தாமதம் என்பது எனக்கும் சிறு வலி ஏற்படுத்தும் விஷயம்தான். ஏனென்றால் அவ்வளவு எதிர்பார்ப்புடன் நீங்கள் இருக்கிறீர்கள். இந்த சின்ன இடைவெளியை மாறாவின் உலகத்தில் நீங்கள் பிரவேசிக்க ஒரு முன்தயாரிப்பு நேரமாக எடுத்துக்கொள்ளலாம். விரைவில் சிறப்பு முன்னோட்டத்தை வெளியிட இருக்கிறோம். இத்துடன் ஓர் அழகான நட்பை பற்றிய பாடலை வெளியிடுகிறோம். இவ்வாறு சூர்யா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











