அஞ்சான் ரீ ரிலீஸ்.. அப்பவே ஓடுல.. இப்போ ஓடுமா? சுருக் கேள்வியால் மாறிய லிங்குசாமியின் முகம்
சென்னை: நடிகர் சூர்யா, சமந்தா, வித்யூத் ஜமால், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான படம் அஞ்சான். இந்த படத்தை இயக்குநர் லிங்குசாமி இயக்க, அவரது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்தது. படம் வெளியான போது, ஒரு சிலருக்கும் மிகவும் பிடித்த படமாக மாறினாலும், பெருமளவில் ட்ரோல் செய்யப்பட்ட படமாகவும் உருவெடுத்தது. இதனால் படம் தோல்வியையும் கண்டது. வழக்கமாக தமிழ் சினிமாவில் ரீ ரிலீஸ் செய்கிறார்கள் என்றாலே, மிகப்பெரிய ஹிட் படத்தைதான் ரீ ரிலீஸ் செய்வார்கள்.
ஆனால் இயக்குநர் லிங்குசாமி சூர்யாவுக்கு தோல்வி படமாக மாறிய அஞ்சான் படத்தை 11 ஆண்டுகளுக்குப் பின்னர் ரீ ரிலீஸ் செய்வது என்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த லிங்குசாமி பல கேள்விகளை எதிர்கொண்டார். அதில் முக்கியமான கேள்வி, படம் அப்போதே ஓடவில்லை, இப்போது மட்டும் ஓடுமா என்பதுதான். அதற்கு அவர் அளித்துள்ள பதில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

அவர் பேசுகையில், " அஞ்சான் உண்மையிலேயே எனக்கு மிகவும் பிடித்த படம். படத்தை சொன்ன தேதியில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற நெருக்கடியால் படத்தின் முதல் பாதி மற்றும் இரண்டாம் பாதி என இரண்டையும் ஒரு சேர பார்க்க கூட எங்களுக்கு நேரம் இல்லை. தற்போது படத்தின் கால அளவை 2 மணி நேரமாக குறைத்துள்ளோம். படத்தில் இருந்து சுமார் 30 நிமிட காட்சிகளை வெட்டி எடுத்து விட்டோம். படம் முழுக்க சூர்யா மட்டும் தான் இருப்பார். படத்தில் சூரி இல்லை என்பது போல தான் படத்தை ரீ எடிட் செய்துள்ளோம். படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.
நாங்கள் தொடர் வெற்றியில் இருந்தோம். அதனால் நான் தவறு செய்ய மாட்டேன் என்று பலரும் நம்பினார்கள். ஆனால் அஞ்சான் படத்தில் நாங்கள் செய்த தவறை ஒத்துக் கொள்கிறோம். அவற்றை எல்லாம் சரி செய்து படத்தை ரீ எடிட்டின் மூலம் மாற்றி அமைத்துள்ளோம். படம் பார்த்த சூர்யாவின் அப்பா மற்றும் அம்மாவுக்கு படம் பிடித்துள்ளதாக தெரிவித்தார்கள். சூர்யா இன்னும் படம் பார்க்கவில்லை. பார்ப்பதாக சொல்லி உள்ளார்.

ஒரு படத்தை ட்ரோல் செய்து காலி செய்வதில் முதலில் மாட்டியது நாங்கள் தான். அப்படி எதை எல்லாம் ட்ரோல் செய்து, படத்தில் இது, தவறு, அது தவறு என்று எல்லாம் குறிப்பிட்டுச் சொன்னார்களோ அவற்றை எல்லாம் கவனமாக கையாண்டு, ரீ எடிட் செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த பதில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அஞ்சான் நாளை மறுநாள் அதாவது நவம்பர் 28ஆம் தேதி ரீ ரிலீஸ் ஆகவுள்ளது. படட்தைப் பார்க்க சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











