என் வருமானத்தில்தான் எல்லாம்... அகரம் புதிய அலுவலகம் திறப்பு விழா.. எமோஷனலான சூர்யா
சென்னை: சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. தற்போது கார்த்திக் சுப்புராஜின் ரெட்ரோ படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர்; ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்துவருகிறார். இதனைத் தொடர்ந்து வெற்றிமாறனின் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க அகரம் ஃபவுண்டேஷனுக்கான புதிய அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது.
வசந்த் இயக்கிய நேருக்கு நேர் படத்தில் முதலில் அஜித்தும், விஜய்யும் நடித்தார்கள். ஆனால் அஜித் சில காரணங்களால் அந்தப் படத்திலிருந்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து சூர்யாவை அந்தப் படத்தில் நடிக்க வைத்தார் வசந்த். அந்தப் படத்துக்கு பிறகு சூர்யா நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை. அப்படிப்பட்ட சூழலில்தான் பாலா இயக்கத்தில் நந்தா படத்தில் நடித்தார் சூர்யா. அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. முக்கியமாக சூர்யாவுக்கு நடிக்க தெரியும்; அவரால் ஆக்ஷன் ஹீரோவாகவும் மிளிர முடியும் என்பதை ரசிகர்களுக்கும், கோலிவுட்டுக்கும் உணர்த்தியது.

டாப்ஹீரோ: அந்தப் படத்துக்கு பிறகு அவர் நடித்த காக்க காக்க உள்ளிட்ட படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. ஒருபக்கம் கமர்ஷியல் பாதையிலும் மறுபக்கம் நடிப்புக்கு தீனி போடும் கதைகளிலும் நடித்தார். இதன் காரணமாக டாப் 5 இடங்களுக்குள் வந்தார். அதுமட்டுமின்றி நன்றாக நடிக்க தெரியாது என்று சொன்னவர்கள் வாயாலேயே; கோலிவுட்டின் நல்ல நடிகர்களில் சூர்யாவும் ஒருவர் என்று பேச வைத்தார். ஆனால் அவருக்கு கடந்த சில வருடங்களாக ஹிட் படங்கள் எதுவும் அமையவில்லை.
கங்குவா டூ ஆர்.ஜே.பாலாஜி: அவரது நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா, எதற்கும் துணிந்தவன் ஆகிய இரண்டு படங்களுமே தோல்வியடைந்தன. தற்போது அவர் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மேலும் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துவரும் அவர்; வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருக்கிறார். கடந்த சில வருடங்களாகவே சூர்யா வெற்றி படங்கள் எதுவும் கொடுக்காததால் அடுத்து வரும் படங்கள் மீது பெரிய நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் அவரது ரசிகர்கள் வைத்திருக்கிறார்கள்.
அகரம் சூர்யா: இதற்கிடையே நடிப்பு மட்டுமின்றி நல்ல விஷயங்களையும் சூர்யா செய்துவருகிறார். முக்கியமாக அகரம் ஃபவுண்டேஷன் மூலம் ஏராளமான ஏழை குழந்தைகளை அவர் படிக்க வைத்திருக்கிறார்; இன்னமும் அதை செய்துவருகிறார். சூழல் இப்படி இருக்க சென்னையில் அகரம் நிறுவனத்துக்கென புதிய அலுவலகம் ஒன்று நேற்று திறக்கப்பட்டது. அதில் சூர்யா ரொம்பவே எமோஷனலாக பேசினார்.
சூர்யாவின் பேச்சு: அந்த விழாவில் பேசிய சூர்யா, "கஜினி படத்தை முடித்த பின்பு 2006ஆம் ஆண்டு மக்கள் எனக்கு கொடுத்த அன்பை ஏதாவது ஒருவகையில் அவர்களுக்கு திருப்பி கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அந்த விதைதான் இன்று ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது. பொருளாதார நெருக்கடியால் முதல் தலைமுறை மாணவர்களின் கல்வி கேள்விகுறியாகிவிடுகிறது என்று இயக்குநர் ஞானவேல் சொன்னதுதான் அகரம் தொடங்குவதற்கு காரணமாக அமைந்தது. அப்போது அகரத்தை பத்துக்கு பத்து அறையில்தான் தொடங்கினோம்.
அகரத்தின் வளர்ச்சி: அதற்கு பிறகு இரண்டு அறைகள் கொண்ட வீட்டில் அகரம் பணிகள் நடந்தன. அதனையடுத்து எனது தந்தை சிவகுமார் ஒரு இடம் கொடுத்தார். அதில் அந்தப் பணிகள் நடந்தன. 2010ஆம் ஆண்டு விதை என்கிற திட்டத்தை தொடங்கினோம். அரசு பள்ளியில் படித்து முடித்த மாணவர்கள், மாணவிகளை கல்லூரியில் சேர்க்கும் திட்டமே விதை. அவர்கள் அத்தனை பேரும் முதல் தலைமுறை மாணவர்கள். கல்வியே ஆயுதம்; கல்வியே கேடயம்.
ரொம்ப சந்தோஷம்: அகரம் இன்னமும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. தற்போது அலுவலகம் கட்டப்பட்டிருக்கும் இடம் படிப்புக்காக வந்த நன்கொடையில் வாங்கிய இடம் இல்லை. எனக்கு கிடைத்த வருமானத்தில் கட்டப்பட்ட இடம். நன்கொடையாக வரும் ஒவ்வொரு ரூபாயும் படிப்புக்காக மட்டுமே பயன்படுத்துகிறோம். இது அறிவை பகிரும் இடமாக இருக்கும். எனக்கு இது தாய் வீடு போன்றது. சொந்த வீடு கட்டியபோதும் அந்த சந்தோஷத்தைவிடவும் அகரம் புதிய அலுவலக திறப்பு நாளில் வந்த சந்தோஷம் அதிகமாக இருக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











