Suriya: சூர்யா - ஜோதிகா காதலை வெளிச்சம் போட்டுக் காட்டிய AR ரஹ்மான்... இதெல்லாம் எப்ப நடந்துச்சு..?
சென்னை: கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா, இன்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இதனையடுத்து திரை பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
இன்னொரு பக்கம் சூர்யாவின் கங்குவா பட க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.
இந்நிலையில், சூர்யா - ஜோதிகா திருமணத்தின் போது ஏஆர் ரஹ்மான் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட் குறித்து தற்போது தெரியவந்துள்ளது.

சூர்யா - ஜோதிகாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஏஆர் ரஹ்மான்:நேருக்கு நேர் திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான சூர்யா, இன்று கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவராக கலக்கி வருகிறார். ஆரம்பத்தில் ஹிட் படங்கள் கொடுக்க தடுமாறி வந்த சூர்யா, நந்தா, காக்க காக்க, பிதாமகன் போன்ற படங்கள் மூலம் உச்சம் சென்றார். தற்போது கங்குவா படத்தில் நடித்து வரும் சூர்யா, இன்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு கங்குவா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. சூர்யாவின் கேரியரில் ரொம்பவே சப்போர்ட்டாக இருந்தவர் அவரது மனைவி ஜோதிகா தான். பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடித்தபோதே, சூர்யாவுக்கும் ஜோதிகாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால், இருவருமே தங்களது காதலை பொத்தி பொத்தி வைத்துள்ளனர்.
தொடர்ந்து உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், சில்லுன்னு ஒரு காதல் படங்களில் சூர்யா, ஜோதிகா ஜோடியாக நடித்திருந்தனர். இருவரும் காதலிப்பது முதலில் இயக்குநர் பாலாவுக்கு தான் தெரியுமாம். அவர்தான் சூர்யாவின் அப்பா சிவகுமாரிடம் காதலுக்கு பெர்மிஷன் வாங்கிக் கொடுத்தாராம். ஆனாலும், ஊருக்கே இந்த விஷயத்தை தெரியப்படுத்தியதில் ஏஆர் ரஹ்மானுக்கும் பங்கு இருந்துள்ளது.
சூர்யா - ஜோதிகா இணைந்து நடித்த படங்களில் 'சில்லுன்னு ஒரு காதல்' முக்கியமான ஒன்று. கிருஷ்ணா இயக்கிய இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் தான் இசையமைத்தார். இந்தப் படத்தில் சூர்யாவும் ஜோதிகாவும் கணவன் மனைவியாக நடித்திருந்தனர். ஏஆர் ரஹ்மான் சில்லுன்னு ஒரு காதல் படத்தின் பாடல் கம்போஸிங்கில் இருக்கும் போதுதான், சூர்யா, ஜோதிகா திருமணம் குறித்து மெல்ல மெல்ல செய்திகள் வெளியாகியுள்ளன.

எப்போது வேண்டுமானாலும் அவர்கள் தங்களது காதலை அறிவிப்பார்கள், உடனே திருமணமும் நடக்கலாம் என தெரிய வந்துள்ளது. இதனால் தான் சில்லுன்னு ஒரு காதல் படத்தில் 'அவளுக்கென்ன அம்பாசமுத்திரம் அல்வா மாதிரி' என்ற பாடலை கம்போஸ் செய்துள்ளார் ஏஆர் ரஹ்மான். படத்தின் கதை படி சூர்யா - ஜோதிகாவின் திருமண பாடலாக இது உருவாகியிருக்கும்.
இந்தப் பாடலை கம்போஸ் செய்யும் போதே, "சூர்யாவுக்கும் ஜோதிகாவுக்கும் கல்யாணப் பரிசா இந்தப் பாட்ட கொடுத்துடலாம்" என இயக்குநர் கிருஷ்ணாவிடம் கூறியுள்ளார் ஏஆர் ரஹ்மான். சில்லுன்னு ஒரு காதல் திரைப்படம் 2006 செப்டம்பரில் வெளியானது. அதனைத் தொடர்ந்து மூன்றே நாளில் சூர்யாவுக்கும் ஜோதிகாவுக்கும் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











