சூர்யா முதல் சிவகார்த்திகேயன் வரை.. இதுவரை கொரோனா தடுப்புப் பணிக்கு நிதியளித்த பிரபலங்கள்!
சென்னை: கொரோனா இரண்டாம் அலையை தடுக்கும் பணி தமிழ்நாட்டில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளை அதிகரித்தல், ஆக்ஸிஜன் இறக்குமதி, மருத்துவ உபகரணங்களை கொள்முதல் செய்தல் என எல்லாவற்றுக்கும் நிதி தேவைப்படுகிறது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோளின் படி பல சினிமா பிரபலங்கள் தாராளமாக கொரோனா நிவாரண நிதியை வழங்கி வருகின்றனர்.

ஒரு கோடி ரூபாய்
பழம்பெரும் நடிகர் சிவகுமாரும் அவரது மகன்களும் நடிகருமான சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய மூவரும் முதல் ஆளாக முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து ஒரு கோடி ரூபாய் கொரோனா நிவாரண நிதியை வழங்கினர். கொரோனா பரவலை தடுத்து மக்களை இந்த இக்கட்டான சூழலில் இருந்து காப்பாற்றுங்கள் என கோரிக்கையும் விடுத்தனர்.

ரஜினி மகள்
நடிகர் ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவர் விசாகன் வீட்டு சார்பாக ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதியை முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார். அண்ணாத்த படப்பிடிப்பை முடித்து விட்டு வீடு திரும்பியுள்ள ரஜினிகாந்த் எப்போது நிதி வழங்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அஜித் 25 லட்சம்
தல அஜித் 2.5 கோடி கொடுத்துவிட்டார் என தவறான தகவல் பரவிய நிலையில், முதல்வர் நிவாரண நிதிக்கு நடிகர் அஜித் 25 லட்சம் ரூபாய் வழங்கினார் என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், படப்பிடிப்பு இல்லாமல் அவதியில் வாடும் சினிமா தொழிலாளர்களுக்கு ரூ. 10 லட்சம் நிதியையும் நடிகர் அஜித் வழங்கி உள்ளார்.

ஏ.ஆர். முருகதாஸ்
நடிகர்களுக்கு சமமாக தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களும் கொரோனா பரவலை தடுக்கும் போரில் தங்கள் பணியை சிறப்பாக செய்து வருகின்றனர். இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் ரூ. 25 லட்சம் நிதியை நன்கொடையாக அளித்துள்ளார்.

ஷங்கரும் வெற்றிமாறனும்
தமிழ்ப்படம் இயக்குநர் சி.எஸ். அமுதன் தன்னால் முடிந்த 50 ஆயிரம் தொகையை முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பினார். இயக்குநர் ஷங்கர் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் தலா 10 லட்சம் ரூபாய் நிதியை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளனர்.

சூப்பர் சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்து வரும் நிலையில், நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நடிகர் சிவகார்த்திகேயன் ரூ. 25 லட்சம் ரூபாய் நிதியை வழங்கி உள்ளார்.

10 லட்சம்
கொரோனா பாதிப்பு காரணமாக பொதுமக்கள் தினமும் கொத்து கொத்தாக மடிந்து வருகின்றனர். மக்களின் உயிர்களை காக்க அரசு எடுத்து வரும் தீவிர முயற்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதற்காக நடிகர் ஜெயம் ரவி ரூ. 10 லட்சம் நன்கொடையை வழங்கி உள்ளார். முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்தும் நேரடியாக மக்களுக்கு உதவி செய்தும் வரும் அனைத்து சினிமா பிரபலங்களுக்கும் சமூக வலைதளத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











