Wayanad: வயநாடு நிலச்சரிவு.. 270 பேர் பரிதாப பலி.. நெஞ்சே பதறுதே.. சூர்யா என்ன சொன்னார் தெரியுமா?
திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள வயநாட்டில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக இதுவரை 270 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். வயநாடு நிலச்சரிவு சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியிருக்கிறது. 2வது நாளாக இன்றும் பல கிராமங்களில் மீட்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நடிகரும் தவெக தலைவருமான விஜய் நேற்று வயநாடு நிலச்சரிவு குறித்து தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்தார். அரசு அதிகாரிகள் மக்களை காக்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

சியான் விக்ரம் தனது பங்கிற்கு 20 லட்சம் ரூபாய் கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக கொடுத்திருக்கிறார். பல்வேறு சினிமா பிரபலங்கள் இதுதொடர்பாக கருத்துக்களையும் களத்தில் இறங்கி பணியாற்றுவதையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
270 பேர் பலி: சுற்றுலா பயணிகளின் சொர்க்க பூமியாகவே திகழும் இயற்கை அழகு கொஞ்சும் வயநாடு கடந்த 2 தினங்களாக கோரமாய் காட்சியளிக்கின்றன. மணலில் சிக்கித் தவிக்கும் நாய், நிலச்சரிவால் ஒட்டுமொத்த சொந்தங்களையும் இழந்து தவிக்கும் இளைஞர்களின் அழுகுரல் என எல்லாவற்றையும் கடந்து நொடிப் பொழுதில் வாழ்வின் அத்தனை கனவுகளும் சுக்குநூறாகிப் போய் உயிரிழந்த 270 பேரின் நிலை என நெஞ்சையே உலுக்கும் சம்பவம் வயநாட்டில் நிலச்சரிவு காரணமாக நிகழ்ந்துள்ளது. மேலும், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்கிற அச்சத்தையும் மீட்பு பணியினர் தெரிவித்துள்ளனர்.
நிகிலா விமல்: அழகிய லைலா என ரசிகர்கள் குருவாயூர் அம்பலநடையில் படம் வெளியானதில் இருந்தே நிகிலா விமலை கொண்டாடி வரும் நிலையில், வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு களத்தில் இறங்கி நடிகை நிகிலா விமல் தன்னால் முயன்ற உதவிகளை செய்து வருவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சூர்யா ட்வீட்: நடிகர்கள் விஜய், சியான் விக்ரம், குஷ்பு, ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்ட பல கோலிவுட் பிரபலங்களும் வயநாடு நிலச்சரிவு தொடர்பாக கருத்துக்களை தெரிவித்துள்ள நிலையில், தற்போது நடிகர் சூர்யாவும் தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் ட்வீட் போட்டு தெரிவித்துள்ளார். நெஞ்சே பதறுகிறது.. வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட அத்தனை குடும்பங்களை நினைத்தும் வருந்துகிறேன். மக்களை காப்பாற்றும் பணியில் உள்ள அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் வணங்குகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











