சூர்யா வரலையா?.. திருப்பதி கோயிலில் தனியாக சாமி தரிசனம் செய்த ஜோதிகா.. குவியும் மோசமான கமெண்ட்ஸ்!
சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி நடித்த கங்குவா திரைப்படம் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்த நிலையில், அதற்கு பரிகாரம் தேடும் விதமாக பல்வேறு கோயில்களுக்கு நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா சென்று வருகிறார்களா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழ் சினிமாவின் பெருமை மிகு படைப்பாக கங்குவா மாறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தியன் 2 படத்தை போலவே இந்த ஆண்டு ரசிகர்களை கங்குவா ஏமாற்றியது.
கங்குவா படத்தின் தோல்விக்கு விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் தான் காரணம் என்பது போல தனஞ்செயன் மீண்டும் கங்குவா படம் குறித்த பேட்டிகளை கொடுத்து ரசிகர்களிடம் வாங்கிக் கட்டி வருகிறார். கோயில்களுக்கு செலவு செய்வதை விட பள்ளிக் கூடங்களுக்கு செலவு செய்யலாம் என ஜோதிகா பேசியதற்கு எதிர்ப்பு வலுத்த நிலையில், கங்குவா தோல்விக்கும் அதுதான் காரணம் என யாராவது சொன்னார்களா என தெரியவில்லை கோயில் கோயிலாக சுற்றி வருகிறார் என்கிற விமர்சன கமெண்ட்டுகளை ரசிகர்கள் குவித்து வருகின்றனர்.

நேற்று கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு கணவர் சூர்யாவுடன் ஜோதிகா சென்ற நிலையில், இன்று அதிகாலை திருப்பதி கோயிலுக்கு தனியாக சென்று சாமி தரிசனம் செய்துள்ளார் ஜோதிகா.
யோக நரசிம்மர் கோயில்: சோளிங்கரில் உள்ள யோக நரசிம்மர் கோயிலுக்கு இயக்குநர் சிறுத்தை சிவா மற்றும் நடிகர் சூர்யா சென்று சாமி தரிசனம் செய்தனர். கங்குவா படம் எதிர்பார்த்த வெற்றியை மட்டுமின்றி எதிர்பாராத தோல்வியையும் நஷ்டத்தையும் கொடுத்த நிலையில், நடிகர் சூர்யா குடும்பத்துக்கு மிகப்பெரிய மன உளைச்சலை அந்தப் படம் கொடுத்திருப்பதாக கூறுகின்றனர். தவறான விமர்சனங்கள் மற்றும் தனி மனித தாக்குதல்கள் காரணமாகத்தான் தரமான கங்குவா படம் தோல்வியை தழுவியதாக சூர்யாவின் குடும்பத்தினர் கருதுவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
கொல்லூர் மூகாம்பிகை கோயில்: யோக நரசிம்மர் கோயிலுக்கு சூர்யா மற்றும் சிறுத்தை சிவா சென்ற நிலையில், கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் ஜோடியாக நேற்று கர்நாடகா மாநிலத்துக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். சண்டி யாகத்திலும் சூர்யா பங்கேற்றதாக உள்ளூர் செய்திகள் தகவல் தெரிவித்து இருந்தன.
திருப்பதியில் ஜோதிகா சாமி தரிசனம்: இந்நிலையில், இன்று அதிகாலை சுப்ரபாத சேவை தரிசனத்தை நடிகை ஜோதிகா திருப்பதிக்கு தனியாக சென்று சேவித்துவிட்டு வந்திருக்கிறார். அதன் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. நடிகர் சூர்யா தனது அடுத்த பட ஷூட்டிங்கில் பிஸியாகி விட்ட நிலையில், ஜோதிகா மட்டும் ஆந்திராவில் உள்ள திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார் எனக் கூறுகின்றனர்.
கேரளாவுக்கு செல்வாரா?: தென்னிந்தியா முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு சூர்யா குடும்பத்தினர் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்களா? என்கிற கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா என 3 மாநிலங்களை கவர் செய்துள்ள நிலையில், அடுத்து ஜோதிகா கேரளாவுக்கும் செல்ல அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறுகின்றனர்.
மோசமான கமெண்ட்ஸ்: நடிகை ஜோதிகாவால் தான் சூர்யா மும்பைக்கு சென்றார் என்றும் சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் படங்களை அமேசான் பிரைம் ஓடிடிக்கு விற்க சொல்லி வற்புறுத்தியதும் ஜோதிகா தான் என்றும் மீண்டும் அவரை அட்டாக் செய்யும் மோசமான கமெண்ட்டுகளை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். கோயில்களை பழித்தால் இப்படித்தான் கோயில் கோயிலாக சுற்ற வேண்டிய நிலை வரும் என்றும் சில நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











