Suriya: சிவக்குமார் மகன் என்பதே எனக்கான அடையாளம்.. அப்பா குறித்து சூர்யா பெருமிதம்!
சென்னை: தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவர் சிவக்குமார். இவர் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டாலும், அவரது நடவடிக்கைகள் தொடர்ந்து சமூகத்தில் கவனத்தை ஈர்த்து வருகிறது. 100 மலர்களின் பெயரை ஒருங்கே சொல்லி வாழ்த்துவது, ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்டவை தொடங்கி சங்க கால இலக்கியங்கள் என பலவற்றில் உள்ள கருத்துக்களை தனது சொற்பொழிவுகளில் பேசுவது, ஓவியங்கள் வரைவது என தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
இது மட்டும் இல்லாமல், ஸ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளை ஒன்றை நிறுவி, அதை சிறப்பாகவும் நடத்தி வருகிறார். இவரது இரு மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களாகவும், அதே நேரத்தில் சூர்யா அகரம் என்ற அறக்கட்டளையையும் நடிகர் கார்த்தி, உழவன் அறக்கட்டளையை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று முன் தினம் அதாவது நவம்பர் 28ஆம் தேதி நடிகர் சிவக்குமாருக்கு தமிழ்நாடு அரசு, மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து நடிகர் சூர்யா தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், " ஓர் ஓவியராக வாழ்வைத் தொடங்கியவர் என் அப்பா. ஒரு புள்ளியில் தொடங்கும் கோடு எவ்வளவு நுட்பமாக ஓவியமாக மாறுகிறதோ...அதைப் போலவே தன் வாழ்வையும் நெறியும் நேர்த்தியுமாய் வகுத்துக் கொண்டவர். ஒரு கிராமத்திலிருந்து கிளம்பி வந்து, கலையுலகின் கவனம் திருப்பி, எல்லோருக்குமான முன்னுதாரணமாக மாறிய அவருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் என்பது மிகப் பொருத்தமானது. எள்ளளவும் நெறிபிறழாத அவர் வாழ்க்கைக்கும் திறமைக்கும் வாய்த்த அங்கீகாரமாகவே இதைப் பார்க்கிறோம்.
எனது அடையாளம்: சிறுவனாக இருந்த காலம் தொட்டு இன்று வரை அப்பாவின் ஆச்சர்ய உயரங்களை கண்டு வியக்கும் நான், அவரது உறுதி, உழைப்பு மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றையே எனக்கான பாடமாகக் கொள்கிறேன். அவரது சாதனைகளை விட அவரது வாழ்வியல் விழுமியங்களே (fe Values) என் வாழ்க்கையையும் எண்ணங்களையும் செதுக்கி இருக்கின்றன. சிவகுமார் அவர்களின் மகன்' என்பதே என்றைக்கும் எனக்கான அடையாளம் என் வாழ்நாளுக்கான அங்கீகாரம்.

ஓவியர் சந்துரு: எங்கள் தந்தையின் 60 ஆண்டுகால பயணம் தமிழ்ச் சமூகத்திற்கு பயன்பட்டிருப்பதன் அங்கீகாரமாகவே இந்த முனைவர் பட்டத்தை கருதுகிறோம். இந்தத் தருணத்தில் மதிப்பிற்குரிய ஓவியர் திரு சந்துரு (எ) குருசாமி சந்திரசேகரன் அவர்களுக்கும் கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம் எங்களுக்கு கூடுதல் மகிழ்வைத் தருகிறது.
நன்றி: இருவருக்கும் மகத்தான கெளரவத்தை வழங்கிய தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக் கழகத்திற்கும், இச்சிறப்பை முன்னின்று வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பிலும், எல்லோர் சார்பிலும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றிகளுடன், சூர்யா" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











