வாடகைத்தாய் குழந்தை..சட்டத்தை மீறினார்களா நயன் விக்கி தம்பதி?..வாடகைத்தாய் நடைமுறை என்ன?..ஒரு அலசல்
நயன்தாரா-விக்னேஷ் ஜோடி ஜூனில் கல்யாணம் செய்து, அக்டோபரில் வாடகைத்தாய் மூலம் குழந்தைபெறுவது நடைமுறை சாத்தியமா?
வாடகைத்தாய் மூலம் குழந்தைப்பெற்றதால் சட்டத்தை மீறியுள்ளார்கள் நயன் விக்னேஷ் தம்பதி என சொல்வது சரியா?
வாடகைத்தாய் விதிமுறைகள் என்னென்ன? சமூக வலைதளங்களில் நடக்கும் மோதல்கள் ஏன்?

நயன் விக்கி இரட்டை குழந்தை சமூக வலைதளங்களில் கிளம்பிய சர்ச்சை
நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியினர், வாடகை தாய் முறை மூலம் இரட்டை குழந்தை பெற்றுள்ளதாக நேற்று அறிவித்த நிலையில் இது குறித்த சாதக பாதகங்களும் சமூக வலைதளங்களில் விவாதமாக கிளம்ப தொடங்கியுள்ளது. வாடகைத்தாய் மூலம் குழந்தைப் பெற்றுக்கொள்வதை வணிகரீதியாக இருந்ததை வழிமுறைப்படுத்த இந்திய அரசால் சட்டம் கொண்டுவரப்பட்டது. அது ஜனவரி 25, 2022 முதல் அமலுக்கு வந்துள்ளது. அதனால் வாடகைத்தாய் மூலம் குழந்தைப்பெற்ற நயன் விக்கி இருவரும் அந்தச் சட்டப்படி நடந்தார்களா? இல்லையா என்கிற வாதம் வைக்கப்படுகிறது.

விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களா நயன் விக்கி தம்பதி
நயன் விக்கி குழந்தைப்பெற்றது குறித்து பல்வேறு சர்ச்சைகள், சமூக வலைதளங்களில் வெளியாகி ஆதரவு எதிர்ப்பு கருத்துகள் ஓடுகின்றன. நயன் -விக்கி இருவருமே சமுதாயத்தில் பொறுப்புள்ள இடத்தில் இருக்கும் பிரபலங்கள். அவர்களை கோடிக்கணக்கானோர் பின்பற்றும்போது அவர்கள் செய்யும் செயலும் சட்டத்துக்குட்பட்டு இருக்க வேண்டும். சட்டத்தை மீறி இருக்கிறார்களா என்று கேள்வி வைக்கலாம், ஆனால் மீறினார்கள் என்று யாரும் தீர்ப்பு எழுத முடியாது. விமர்சனம், அவதூறு இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு.

சந்தேகங்களை தீர்க்காமல் விவாதத்தை கிளப்ப காரணமாக இருக்கிறார்களா? நயன் விக்கி
சரியாக சொன்னால் உண்மை, வாடகைத்தாய் மூலம் குழந்தைப்பெறுவது குறித்த சட்டம் ஜனவரியில் அமலான பின்னர் இவர்கள் குழந்தைப்பேற்றை அடைந்ததால் அதுகுறித்த சந்தேகங்களை குறைந்தப்பட்சம் தெளிவாக்க வேண்டிய கடமை அவர்களுக்கு உள்ளது. மருத்துவர் அல்லது வழக்கறிஞர் மூலம் தெளிவுப்படுத்தும் கடமை உள்ளது. அதுவரை இத்தகைய விவாதங்கள் கிளம்பவே செய்யும்.

சட்டத்தை மீறினார்களா நயன் விக்கி
சட்டத்தை மீறினார்களா இல்லையா என்பதை அவர்கள் அளிக்கும் சான்றிதழ், அவர்கள் குழந்தைப்பெற முடிவு செய்து அப்ளை செய்த தேதி உள்ளிட்டவைகளை ஆராய்ந்த பின்னரே நீதிமன்றம் தீர்மானிக்கும். இதில் தனிப்பட்ட கருத்தை யாரும் கூற முடியாது. அதே நேரம் வாடகைத்தாய் குழந்தை பிரச்சினையில் 2022 ஆம் ஆண்டு சட்டத்தில் சொல்லப்பட்டவைகளை இவர்கள் மீறியுள்ளார்களா என்பது விவாத பொருளாக மாறியுள்ளது.

வாடகைத்தாய் சட்டம் சொல்வது என்ன?
ஜனவரி 25 2022 க்குப்பிறகு வெளியான சட்டத்தில் கீழ் கண்ட அம்சங்கள் உள்ளது.
*வாடகைத்தாய் மூலம் குழந்தைப் பெற்றுக்கொள்பவர்கள் (ஜனவரி 25 2022 சட்டம் அமலானப்பின்) இருவரில் ஒருவர் குழந்தைப்பேறு அடைய உடல் ரீதியாக தகுதி இல்லாதவராக இருக்க வேண்டும்.
*இந்த சான்றிதழை அரசு மாவட்ட மருத்துவத்துறை அளிக்க வேண்டும்.
*இந்திய தம்பதிகள் திருமணமாகி 5 ஆண்டுகள் கழித்துத்தான் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.
* எதற்காக குழந்தை வேண்டும், நாங்கள் இத்தகைய உடல் சிக்கல் இருப்பதால் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற முயல்கிறோம் என்பதற்கான உடல் தகுதி குறித்த சான்றிதழ், மாவட்ட மருத்துவத்துறை கொடுக்கவேண்டும்.
*குழந்தைப்பெற்றப்பின் இந்த சான்றிதழ்களை சமர்பித்து இந்த குழந்தை இவர்களுடையது தான் என்று மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் அனுமதி வாங்க வேண்டும்.
* வாடகைத்தாய் நெருங்கிய உறவினராக இருக்க வேண்டும். 25 - 35 வயதுக்குள் இருக்கவேண்டும்,
*அவர் திருமணமாகி ஒரு குழந்தை பெற்றிருக்க வேண்டும். அல்லது விவாகரத்தானவர் அல்லது விதவையாக இருக்கலாம்.
*அவர் இதற்கு முன் வாடகைத்தாயாக இருந்திருக்கக்கூடாது.
இதைமீறினால் சம்பந்தப்பட்டவர்களுக்கு 5 ஆண்டு சிறை, அல்லது இரண்டில் ஒன்று அல்லது இரண்டு தண்டனையும் சேர்த்து உண்டு.

நயன் விக்கி பிரச்சினை என்ன?
நயன் விக்கி பிரச்சினையை யாரும் அறுதியிட்டு தீர்ப்பு சொல்ல முடியாது. அவர்கள் எந்த நேரத்தில் அப்ளை செய்தார்கள். விதிமுறைகளுக்கு உட்பட்டு செய்தார்களா? என்பதை விளக்கமாக அரசு கேட்கும். அதற்கான சரியான பதில் தரும்பட்சத்தில் பிரச்சினை இல்லை. சட்டத்தை மீறியிருந்தால் வழக்கு பாயும். வழக்கை அவர்கள் எதிர்கொள்ள நேரிடும் என்பதே சட்ட வல்லுநர்கள் சொல்வது.


Click it and Unblock the Notifications











