”மஸ்குலார் டைஸ்ட்ரோபி” நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய சூர்யா!
சென்னை: தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஆசையை நடிகர் சூர்யா நிறைவேற்றியுள்ளார்.
சினிமாவை தாண்டி நல்ல எண்ணங்களை இளைஞர்களின் மனதில் விதைக்கும் முயற்சியில் தன் அப்பா சிவக்குமாரை போலவே ஈடுபட்டு வருபவர் நடிகர் சூர்யா. தன்னுடைய அகரம் பவுண்டேசன் மூலம் ஆண்டு தோறும் ஏழை மாணவ, மாணவியருக்கு கல்வி உதவி செய்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஆசையை அவர் நிறைவேற்றியுள்ளார். தேனி மாவட்டம் காட்டுநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சிறுவன் தினேஷ்குமார் படம் வரைவதில் கில்லாடி என்பதோடு தீவிர சூர்யா ரசிகன். எப்படியாவது சூர்யாவை நேரில் பார்த்து அவரை வரைய வேண்டும் என்பது சிறுவனின் ஆசையாக இருந்துள்ளது.
தினசரி வேலைகளைக் கூட செய்யவிடாமல் முடக்கும் கொடிய நோயான "மஸ்குலார் டைஸ்ட்ரோபி" எனும் தசை சிதைவு நோயால் அவதிப்பட்டு வரும் தினேஷின் குடும்பத்தாருக்கு அதை எப்படி நிறைவேற்றுவது எனத் தெரியவில்லை. இதுகுறித்து தகவலறிந்த தேனி மாவட்ட சூர்யா ரசிகர் மன்றத்தினர், சூர்யாவை சந்திக்க ஏற்பாடு செய்தனர்.
சிறுவனுடனும், குடும்பத்தினருடன் நேரம் செலவழித்து அவர்களை சூர்யா மகிழ்வித்துள்ளார். தினேஷ்குமாரிடம் உன் அடிமனதில் எதை நினைக்கிறாயோ அது நிச்சயம் நடக்கும் என ஊக்குவித்து அனுப்பியுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் சிறுவனின் மருத்துவ செலவை ஏற்பதாகவும் உறுதியளித்துள்ளார். இந்த சந்திப்பின் போது சிவகுமார் கார்த்தி ஆகியோரும் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











