ஹாட்ரிக் வெற்றிக்கு தயாராகும் சூர்யா - கௌதம் மேனன்.. நல்ல சேதி சொன்ன ஐசரி கணேஷ்!
மீண்டும் கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: நடிகர் சூர்யாவும், இயக்குனர் கௌதம் மேனனும் மூன்றாவது முறையாக கைக்கோர்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யாவை வைத்து காக்க காக்க, வாரணம் ஆயிரம் என இரண்டு சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர் கௌதம் மேனன். மூன்றாவது முறையாக அவர்கள் துருவ நட்சத்திரம் படம் மூலம் இணைவதாக இருந்தது.

ஆனால் சில பல காரணங்களால் அப்படம் விக்ரம் கைக்கு மாறியது. படவேலைகள் முடிந்து விட்ட நிலையில் ரிலீஸ் தாமதமாகி வருகிறது. இதேபோல் தனுஷை வைத்து கௌதம் மேனன் இயக்கிய என்னை நோக்கி பாயும் தோட்டா படமும் நீண்ட போராட்டங்களுக்கு பிறகு இம்மாதம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஜோஷ்வா என்ற படத்தை இயக்க இருக்கிறார் கௌதம் மேனன். இது தொடர்பாக ஐசரி கணேஷ் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ஜோஷ்வா படத்தைத் தொடர்ந்து கௌதம் மேனனின் அடுத்த படத்தையும் அவரது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனலே தயாரிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அப்படத்தில் கௌதம் மேனன் சூர்யாவை நாயகனாக்க திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. கௌதம் மேனன் படங்கள் என்றாலே ஒன்று காதல் நிரம்பி வழியும் அல்லது ஆக்ஷன் தூள் பறக்கும். சில படங்கள் இரண்டும் கலந்த கலவையாக அமைந்து விடும்.
எனவே, மீண்டும் சூர்யாவை கௌதம் மேனன் இயக்க வேண்டும் என்பது சூர்யா ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. விரைவில் அவர்களது ஆசை நிறைவேறும் எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











