சூர்யாவின் 'அஞ்சான்' - தமிழ், தெலுங்கில் பிரமாண்டமாகத் தயாராகிறது!
லிங்குசாமி இயக்கத்தில் உருவாகும் சூர்யாவின் அஞ்சான் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடிப் படமாக உருவாகிறது.
சூர்யா நடித்த படங்களிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு பிரமாண்ட பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாகிறது.
லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸும் யுடிவி நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் வித்யுத் ஜம்வால், சமந்தா, மனோஜ் பாஜ்பாய், தலிப் தாஹில், பிரமானந்தம் உள்பட முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்று நடிக்கிறார்கள்.
'அஞ்சான்' என்றால் அஞ்சாதவன், அச்சம் இல்லாதவன் என்பது இதன் பொருள் (இந்தியில் கூட இதே பெயரில் வெளியிட்டுக் கொள்ளலாம்.. தலைப்புக்கு அர்த்தம் மாறுபட்டாலும்!!)

'அஞ்சான்' படம் பற்றி டிஸ்னி -யூடிவியின் தென் பிராந்திய வணிகம் மற்றும் ஸ்டுடியோஸின் முதன்மை அதிகாரி ஜி.தனஞ்ஜெயன் கூறுகையில், "மூன்றாவது முறையாக திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துடன் இணைவதில் மகிழ்ச்சி. எங்களுக்குள் அழுத்தமான நட்புறவும் ஆழமான புரிதலும் இருக்கின்றன. அவை மேலும் தொடரும். ஏற்கெனவே நாங்கள் இணைந்த 'வேட்டை' 'இவன்' வேற மாதிரி' இரண்டுமே வசூலில் வெற்றி பெற்றவை. அடுத்த மெகா பட்ஜெட் படமாக 'அஞ்சான்' இருக்கும். அதை நோக்கி பயணப் படுகிறோம். எங்கள் வெற்றி வரிசையின் தொடர்ச்சியாக இப்படம் இருக்கும், " என்றார்.
இயக்குநர் என். லிங்குசாமி கூறுகையில், "நாங்களும் நல்ல செய்தியை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். திருப்பதி பிரதர்ஸ் பட நிறுவனமான நாங்கள் இணை தயாரிப்பாளர்களாக இருக்கும் யூடிவியுடன் நல்ல நட்புறவுடன் இருக்கிறோம். முந்தைய எங்கள் படங்கள் எல்லாமே பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. நாங்கள் அவர்களின் ஆதரவையும் புரிதலையும் மதிக்கிறோம். அடுத்த படமான 'அஞ்சானு'டன் இணைத்துக் கொள்வதிலும் மகிழ்ச்சி அடைகிறோம். தொழில் ரீதியாக அவர்கள் அனுபவம் மிக்கவர்கள்.வியாபார திறமையும் விநியோக பலமும் கொண்டவர்கள் அது எங்களுக்கு பெரிய,பலமான பின்னணி சக்தியாக விளங்கும்.

இந்தப் படம் பட்ஜெட்டாலும் நட்சத்திரங்களாலும் படப்பிடிப்பு இடங்களாலும் தமிழ்த்திரை இதுவரை காணாத வகையில் இருக்கும். இப்படம் மிகப்பெரிய மாஸ் எண்டர் டெய்னராக இருக்கும் ஆகஸ்ட் 2014 ல் வெளியாகும் இது ரசிகர்களுக்குப் புதிய அனுபவமாக இருக்கும்,"என்றார்.
மும்பையில் முதல் கட்டமாக 35 நாட்கள் நடந்த 'அஞ்சான்' படப்பிடிப்பு அண்மையில்தான் முடிவடைந்தது.
அடுத்தகட்டம் ஜனவரி இறுதியில் புறப்பட உள்ளது படக்குழு. கோவா மற்றும் மகாராஷ்டிரா செல்லும் இந்தக் குழு, தமிழ்த்திரை காணாத பல புதிய இடங்களுக்கு செல்லவுள்ளது.
முழுப்படமும் தமிழ்நாடு அல்லாத வெளியிடங்களில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிடப் பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் 'அஞ்சான்' ஒரே நேரத்தில் நேரடிப் படமாக உருவாகிறது.


Click it and Unblock the Notifications











