Kanguva - இரண்டு பாகங்களாக உருவாகிறதா கங்குவா?.. வெளியான புதிய தகவல்
சென்னை: Kanguva (கங்குவா) சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் கங்குவா படம் இரண்டு பாகங்களாக உருவாகவிருப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
சூர்யா சமீபகாலமாக நடித்துவரும் படங்கள் அனைத்துமே ஹிட்டாகியுள்ளன. வெறும் வசூல் மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் அவரது படங்களுக்கு பலமான வரவேற்பு கிடைத்துவருகிறது. அப்படி அவர் நடித்த சூரரைப் போற்று படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி மெகா ஹிட்டானது. அந்தப் படத்துக்காக சூர்யாவுக்கு தேசிய விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

ஜெய் பீம் சூர்யா: சூர்யாவின் கேரியரிலேயே மிக முக்கிய படமாக அமைந்தது ஜெய் பீம். ஞானவேல் இயக்கியிருந்த அந்தப் படத்தில் சந்துரு என்ற வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சூர்யா. உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவான அந்தப் படம் சமூகத்தில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியது. அதேபோல் சூர்யாவுக்கும் மிகச்சிறந்த பெயரை ஜெய் பீம் பெற்றுக்கொடுத்தது. அதுமட்டுமின்றி சூர்யா போல் முன்னணி நடிகர்கள் சமூக அக்கறையுள்ள படங்களில் நடிக்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்தன.

சூர்யா 42: ஜெய் பீம் படத்தை முடித்த பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்துவருகிறார் சூர்யா. ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா பெரும் பட்ஜெட்டில் இந்தப் படத்தை தயாரிக்கிறார். 10 மொழிகளில் 3டியில் வெளியாகவிருக்கும் இந்தப் படம் சரித்திர கால கதையாக உருவாகிறது.
திஷா பதானி கதாநாயகியாக நடிக்க தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். கோலிவுட்டில் இப்போது பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் படங்களில் இந்தப் படமும் ஒன்று. ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்தாலும் படம் குறித்த அப்டேட் வெளியாகாமல் இருந்தது.

கங்குவா: இதனையடுத்து படத்தின் பெயரும், போஸ்டரும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி படத்துக்கு கங்குவா என பெயரிடப்பட்டுள்ளது. டைட்டில் டீசரை பார்த்த சூர்யா ரசிகர்கள் படம் நிச்சயம் மெகா ஹிட்டடிக்கும் எனவும், கங்குவா என்ற பெயர் வித்தியாசமாக இருப்பதாகவும் கருத்து தெரிவித்தனர். கங்குவா என்றால் நெருப்பு சக்தி கொண்ட மனிதன் என படத்தின் இயக்குநர் சிவா விளக்கமும் அளித்திருந்தார்.
இரண்டு பாகங்கள்: இந்நிலையில் கங்குவா படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி, இந்தப் படம் 2 பாகங்களாக வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. முதல் பாகத்தின் கிளைமாக்ஸில் இரண்டாவது பாகத்துக்கான லீட் இருக்கும் என்று தெரிகிறது. நவம்பரில் படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அடுத்த வருடத் தொடக்கத்தில் முதல் பாகம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
விறுவிறு ஷூட்டிங்: கங்குவா படத்தின் ஷூட்டிங் இப்போது கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் நடந்துவருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த ஷூட்டிங்தான் படத்தின் க்ளைம்கேஸ்க்கான ஷூட்டிங் என்றும் பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தை விரைவில் முடித்துவிட்டு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் இறங்குவதற்கு சிறுத்தை சிவா ஆயத்தமாகி வருகிறார். சூர்யா இந்தப் படத்தை முடித்துவிட்டு வாடிவாசல் செல்லவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











