குழந்தை முகம் முதல் கொடூர ரோலக்ஸ் முகம்வரை.. சூர்யா கடந்து வந்த கரடுமுரடான பாதை!
சென்னை : நடிகர் சூர்யாவிற்கு தற்போது தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சூரரைப் போற்று படத்தில் அவரது சிறப்பான நடிப்பிற்காக இந்த விருது வழங்கப்பட உள்ளது.
ஒரு காலகட்டத்தில் தான் நடிக்கப் போகிறேன் என்று தனது நண்பர்களிடம் சூர்யா சொன்னபோது அவர்கள் கேலி செய்து சிரித்தார்களாம்.
ஆனால் அவர்களுடைய கேலியை பொய்யாக்க ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்றே முதல்முறையாக நடிக்கத் துவங்கியுள்ளார் சூர்யா.

நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா சிறப்பான பல படங்களில் நடித்து தன்னை நிரூபித்து வருகிறார். தற்போது சூரரைப் போற்று படத்தில் அவரது நடிப்பு அவருக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்துள்ளது. இதற்காக அவர் கடந்து வந்த பாதை அவ்வளவு எளிதானதல்ல. தன்னைப் பார்த்து, தன்னுடைய நடிப்பை பார்த்து எள்ளி நகையாடியவர்ளுக்கு அவர் தந்த பரிசு இந்த தேசிய விருது.

கடனுக்காக நடிக்க வந்த சூர்யா
நேருக்கு நேர் என்ற படத்தில் முதல்முறையாக என்ட்ரி கொடுத்திருந்தார் சூர்யா. தன்னுடைய குடும்பத்தில் 25 ஆயிரம் ரூபாய் கடன் இருந்ததாகவும் அதை அடைக்கும் பொறுப்பு மூத்த மகனான தனக்கு இருந்ததாகவும் அதற்காகவே தான் நடிக்க வந்ததாகவும் முன்னதாக சூர்யா ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். முதல்படமான நேருக்கு நேர் படத்தில் அவருக்கு கிடைத்த சம்பளம் 50 ஆயிரம் ரூபாய்.

நண்பர்கள் செய்த கேலி
தான் நடிக்கப் போவதாக தன்னுடைய நண்பர்களிடம் சொன்ன போது அவர்கள் அனைவரும் கேலி செய்து சிரித்ததாகவும் அதற்காகவே இதை சேலஞ்சாக எடுத்துக் கொண்டு ஒரு படத்திலாவது தான் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே தான் நடிக்க வந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

குழந்தைதனமான முகம்
தான் கார்மெண்ட்ஸ் வேலையில் இருந்தபோது, தனியாக ஒரு நிறுவனத்தை துவங்க பணம் தேவைப்பட்டதாகவும் அதை தன்னுடைய குடும்பத்தினரிடம் கேட்க தயங்கியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார். இதனிடையே நேருக்கு நேர் படம் வெளியானபோது அவரது குழந்தைத்தனமான முகம் அனைவரையும் கேலி செய்ய வைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் அங்கீகாரம்
இதையடுத்தே, கேலி செய்தவர்களுக்கு சிறப்பான பதிலடி கொடுக்கும் வகையில் சிறப்பான பல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார் சூர்யா. பாலாவின் இயக்கத்தில் இவர் நடித்திருந்த நந்தா, பிதாமகன் படங்கள் மட்டுமில்லாமல் ஆறு போன்ற படங்களும் இவரை சிறந்த நடிகராக மக்கள் அங்கீகரிக்க பெரியளவில் உதவி செய்தன.

சூப்பர் ஜோடி
ஆரம்ப கால படங்களில் ஜோதிகாவுடன் இணைந்து நடித்த சூர்யா, தொடர்ந்து பல ஆண்டுகள் காத்திருந்து தனது குடும்பத்தினரின் சம்மதத்துடன் அவரை திருமணம் செய்துக் கொண்டார். பல ஆண்டுகளை கடந்தும் இந்த ஜோடி சிறப்பான ஜோடியாக கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

வித்தியாசமான கேரக்டர்கள்
மேலும் 2டி என்டர்டெயின்மெண்ட் மூலம் சிறப்பான பல படங்களை தன்னுடைய நடிப்பிலும், ஜோதிகா, கார்த்தி நடிப்பிலும், மற்ற நடிகர்களின் நடிப்பிலும் தயாரித்து வருகிறார் சூர்யா. சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் என வித்தியாசமான சூர்யாக்களை ரசிகர்கள் கண்டு களித்தனர்.

சிறந்த நடிகருக்கான தேசிய விருது
இதில் சூரரைப் போற்று படம் ஒரு படி மேலே சென்று தற்போது அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுத் தந்துள்ளது. அவரது தயாரிப்பில் வெளியான இந்தப் படம் 5 தேசிய விருதுகளை குவித்துள்ளது. முதல்வர் உள்ளிட்டவர்களின் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார் சூர்யா.

ரோலக்ஸ் கேரக்டர்
சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் இவரது ரோலக்ஸ் கேரக்டர் மிரடடலாக அமைந்தது. இதில் இடம்பெறும் ரோலக்ஸ்சார் என்ற வசனம் இன்றைய தினமும் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இருந்தது. அந்த அளவிற்கு சில நிமிடங்களே வரும் இந்தக் கேரக்டரை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார் சூர்யா.

தனக்கான பாதை
குழந்தைத்தனமான முகத்துடன், டயலாக்குகளை ஒப்பிக்கும் முகபாவத்துடன் நடித்த சூர்யா, தொடர்ந்து பல கரடுமுரடான பாதைகளில் பயணித்து, பெரிய ஹீரோவின் மகன் என்ற முகமுடியை களைந்து தனக்கான ஒரு பாதையை வகுத்துக் கொண்டவர். இவரது அடுத்தடுத்த வெற்றிப் படங்கள் இவருக்கு ஏராளமான ரசிகர்களை கொடுத்துள்ளது.

சூர்யா பிறந்தநாள்
இன்றைய தினம் சூர்யா தனது பிறந்தநாளை கொண்டாடிவரும் நிலையில், சூர்யா அண்ணா என்று ரசிகர்கள் அவரை செல்லமாக அழைத்து வருகின்றனர். விஜய்க்கு அடுத்தபடியாக காமன் டிபியை சூர்யாவிற்கும் ரசிகர்கள் அமைத்திருந்தனர். அவரது பிறந்தநாள் ட்ரீட்டாக தேசிய விருதுகளை அவர் ரசிகர்களுக்கு சமர்ப்பித்திருந்தார்.

சிறப்பான கதைக்களங்கள்
இவரது திரைப்பயணம் மேலும் சிறப்பான தடங்களில் சென்று முத்திரையை அடுத்தடுத்து பதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப சூர்யா சிறப்பான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஒரு கதை சிறப்பாக அமையும்பட்சத்தில் அதை தானே தயாரிக்கவும் செய்கிறார். இதன்மூலம் இரட்டிப்பு பலன்களையும் பெற்று வருகிறார்.
Recommended Video

சொந்த வாழ்க்கையிலும் சிறப்பு
சூர்யா சொந்த வாழ்க்கையிலும் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் மற்றும் ஜோதிகாவிற்கு தியா மற்றும் தேவ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்களின் முதல் எழுத்துக்களை கொண்டே 2டி என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். சூர்யாவின் திரைப்பயணம் மேன்மேலும் அவருக்கு வெற்றியையும் ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவங்களையும் கொடுக்கும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications











