படுத்த படுக்கையாக இருக்கும் இயக்குநரின் மனைவி.. சொத்தை விற்று மருத்துவ செலவு.. உதவாத திரைத்துறை!
சென்னை: இயக்குனர் பார்த்திபனிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றி வந்த விக்ரமன் புதுவசந்தம் என்ற படத்தை இயக்கி புகழின் உச்சிக்கு சென்றார்.
முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பூவே உனக்காக, சூர்யவம்சம், வானத்தைப் போல, பிரியமான தோழி என பல ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார்.

தற்போது தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்தின் தலைவராக இருக்கும் இயக்குநரின் மனைவி ஜெயப்பிரியா பல ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருக்கிறார். தற்போது அவர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
இயக்குநர் விக்ரமனின் மனைவி: அதில், எனக்கு முதுகு வலி இருந்ததால், மருத்துவமனைக்கு சென்றேன். சிடி ஸ்கேன், ஸ்கேன் என பரிசோதனை செய்துவிட்டு, இது கேன்சர் போல இருக்கு இதனால், பயாப்சி செய்து பார்க்கலாம் என்று சொன்னார்கள். முதலில் இந்த அறுவை சிகிச்சைக்கு ஒத்துக்கொள்ளவில்லை. கேன்சராக இருக்குமோ என்பதால், என் கணவர் மிகவும் பயந்துவிட்டதால், அறுவை சிகிச்சைக்கு ஒத்துக்கொண்டேன்.
தவறான ஆப்ரேஷன்: ஆப்ரேஷன் வெறும் அரைமணி நேரம் மட்டுமே நடக்கும் என்று சொன்னார்கள். ஆனால், மூன்றரை மணி நேரம் நடந்தது. பத்து நாள் கழித்து என் கால் விரலை என்னால் அசைக்கவே முடியவில்லை. பின் ஒரு மாதம் மருத்துவமனையில் வைத்துவிட்டு வீட்டுக்கு போய், பிசியோதெரப்பி செய்து கொள்ளுங்கள் என்று அனுப்பி வைத்துவிட்டார்கள். மருத்துவமனை தப்பான ஆப்ரேஷன் செய்துவிட்டு, அதன் பிறகு எனக்கு எந்த விதமான உதவியையும் செய்யவில்லை.
நிற்கக்கூட முடியல: நானும் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் அனைத்துவிதமான மருத்துவத்தையும் செய்துவிட்டேன். ஆனால், எனக்கு இதுக்கு மேல என்ன செய்வது என்று தெரியவில்லை. வீட்டில் என்னுடன் எப்போதும் இரண்டு நர்சுகள் இருக்கிறார்கள், பரதநாட்டிய கலைஞரான என்னால், எழுந்துக்கூட நிற்க முடியவில்லை, இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை யூரியன் பேக் பயன்படுத்த வேண்டி இருக்கிறது.

சொத்தை விற்று மருத்துவ செலவு: என்னை நினைத்து என் கணவர் மிகவும் வேதனைப்படுகிறார். கஷ்டப்பட்டு சம்பாதித்த ஒவ்வொரு சொத்தையும் விற்றுத்தான் எனக்கான மருத்துவ உதவியை செய்து வருகிறார். இப்போதும் சூர்யவம்சம்2 திரைப்படத்தை எடுக்கும்படி கேட்கிறார்கள். ஆனால், என்னை இந்த நிலைமையில் விட்டுவிட்டு போகமாட்டேன் என்கிறார். எப்படி இருந்த உன்னை இந்த நிலைமையில் பார்க்க முடியவில்லை என கண்கலங்குகிறார். நானும் அழுதால் அவர் கதறிவிடுவார் என்று 5 வருஷமாக தைரியமாக இருக்கிறேன் என்று கண்கலங்கி பேசினார் இயக்குநர் விக்ரமனின் மனைவி ஜெயப்பிரியா.


Click it and Unblock the Notifications











