அடுத்த தலைமுறைக்கு பெரியார்தான் ஹீரோ.. எங்கு வேண்டுமானாலும் வருவேன்.. சுசீந்திரன் அதிரடி
சென்னை: தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவர் சுசீந்திரன். வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர் தொடர்ந்து தரமான படங்களை கொடுத்து முக்கியத்துவம் வாய்ந்த இயக்குநர் என்ற பெயரை பெற்றிருக்கிறார். அவரது இயக்கத்தில் குற்றம் குற்றமே படம் வெளியாகி போதிய வரவேற்பை பெறவில்லை. இந்தச் சூழலில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுசீந்திரன், அங்கு பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இயக்குநர் எழிலிடம் உதவி இயக்குநராக இருந்து வெண்ணிலா கபடி குழு படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் சுசீந்திரன். அந்தப் படம் மெகா ஹிட்டடித்தது. அதனைத் தொடர்ந்து அவர் இயக்கிய நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, ஜீவா, ஆதலால் காதல் செய்வீர், பாண்டியநாடு உள்ளிட்ட படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. இவற்றில் அழகர்சாமியின் குதிரை படத்துக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. அவரது இயக்கத்தில் கடைசியாக குற்றம் குற்றமே திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தையே பெற்றது.

ஆளையே காணும்: கடந்த சில வருடங்களாகவே ஒரு வெற்றிக்காக சுசீந்திரன் தடுமாறி கொண்டிருக்கிறார். சிம்புவை வைத்து அவர் இயக்கிய ஈஸ்வரன் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை சம்பாதித்தது. முக்கியமாக அந்தப் படத்தை சுசீந்திரனும் ரொம்பவே நம்பியிருந்தார். ஆனால் படம் படுதோல்வியையே சந்தித்தது. இப்போது விஜய் ஆண்டனியை வைத்து வள்ளி மயில் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படம் கண்டிப்பாக அவருக்கு வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுசீந்திரன் பேச்சு: இந்நிலையில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துகொண்ட சுசீந்திரன் பேசுகையில், "இந்த மேடையில் நான் ஏறியதும் அப்பாவின் ஞாபகம்தான் வந்தது. வெண்ணிலா கபடி குழுவின் கதையை சிறு வயதிலிருந்தே எனக்கு சொல்லி சொல்லி கபடிக்குள் இருக்கும் சாதி அரசியலை எனக்கு புகுத்தினார். என் அப்பாவின் வாழ்க்கைதான் முதல் புத்தகம். அதைத்தான் நான் படமாக எடுத்தேன். என்னை சென்னைக்கு நம்பிக்கையுடன் அனுப்பிவைத்தார்.
பெரியார் கருத்துக்கள்: இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கும் ஜெயஸ்ரீக்கு பெரியாரின் கருத்துக்களை ஊட்டி ஊட்டி வளர்த்த அவரது தந்தைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இங்கு அவர் என்னை அழைத்ததும் கண்டிப்பாக வருகிறேன் என்று சொல்லிவிட்டேன். காரணம் பெரியார் என்ற வார்த்தையை சொன்னால் நான் எங்கு வேண்டுமானாலும் வந்துவிடுவேன். அடுத்த தலைமுறைக்கு பெரியார்தான் ஹீரோ. அவரை மாதிரி சிந்தனையுள்ள ஒரு மனிதரை பார்க்க முடியாது.
வள்ளி மயில்: விஜய் ஆண்டனி, சத்யராஜை வைத்து வள்ளி மயில் என்ற படத்தை எடுத்திருக்கிறேன். பெரியாரின் கருத்துக்களை மக்களுக்கு எளிதாக புரியும் வகையில் அதில் பேசியிருக்கிறேன். நான் வெண்ணிலா கபடி குழு, அழகர்சாமியின் குதிரை போன்ற இலக்கியம் சார்ந்த படங்கள் எடுத்ததால் நிறைய வாசிப்பேன் என்று நினைக்கிறார்கள். ஆனால் சிறு வயதிலிருந்தே எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லை. நிறைய மனிதர்களுடன் பேசுவேன். அப்படித்தான் ஜீவா, ஆதலால் காதல் செய்வீர் படங்கள் எல்லாம் உருவாகின" என்றார்.


Click it and Unblock the Notifications











