சுஷாந்தின் கடைசி நிமிடங்கள்.. என்ன நடந்தது.. இரண்டு மாதங்களுக்குப் பிறகு மவுனம் கலைத்த சமையல்காரர்!
மும்பை: நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பே இல்லை என அவரது சமையல்காரரான நீரஜ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணமடைந்து 2 மாதங்கள் கடந்து விட்டன. ஆனால் அவரது மரணம் தொடர்பாக நாள்தோறும் ஒரு தகவல் வெளியாகி வருகிறது.
பாலிவுட் அரசியலுக்கு சுஷாந்த் பலியாகி விட்டார் என்றும் அவரது காதலியான ரியா சக்ரவர்த்தியின் சதிதான் காரணம் என்றும் ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

விசாரணை தொடக்கம்
இந்நிலையில் சுஷாந்த் வழக்கை சிபிஐ விசாரிக்க பீகார் அரசு பரிந்துரைத்தது. உச்ச நீதிமன்றமும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து சுஷாந்த் வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க தொடங்கியுள்ளனர்.

நீரஜிடம் விசாரணை
சுஷாந்த் சடலமாக கிடந்ததை முதலில் பார்த்த அவரது வீட்டு சமையல்காரர் நீரஜிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சுஷாந்தின் சமையல்காரரான நீரஜ் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

அதற்கு வாய்ப்பே இல்லை
அதில் ஊகிக்கப்படுவதை போன்று சுஷாந்தின் மரணம் ஒரு கொலையல்ல என கூறியுள்ளார். மேலும் சுஷாந்த் கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பே இல்லை என்றும் கூறியுள்ளார். அவர் தொடர்ந்து பேசியிருப்பதாவது, இது கொலை அல்ல, அவர் தற்கொலை செய்து கொண்டார். நான் கீழே இறங்கியவுடன், 10 நிமிடங்களுக்குள் அவர் கதவை பூட்டிவிட்டார்.

5 நிமிடங்களுக்குள்..
அவர் வழக்கமாக கதவை பூட்டிக்கொள்ள மாட்டார். நான் என்ன சமைக்க வேண்டும் என்று அவரிடம் கேட்க 5 நிமிடங்கள் கழித்து மாடிக்குச் சென்றேன். அப்போது கதவு பூட்டப்பட்டிருப்பதைக் கண்டேன். அவர் 5 நிமிடங்களுக்குள் எல்லாவற்றையும் முடித்துவிட்டார்.

விட்டிருக்க மாட்டோம்
நாங்கள் அருகில் இருந்ததால் இது கொலை என்று நான் நினைக்கவில்லை. அது கொலை என்றால், யாராவது வருவதை நாங்கள் பார்த்திருப்போம். யாராவது அவரைக் கொலை செய்ய வந்திருந்தால், நாங்கள் அதை நடக்க விட்டிருக்க மாட்டோம். வழக்கமாக, அவர் கதவை மூடினால் அவர் தூங்கிக்கொண்டிருப்பார் என தொந்தரவு செய்ய மாட்டோம் என்று கூறியுள்ளார்.

ஃபேனில் தொங்கினார்
மேலும் எல்லாம் மிகவும் விசித்திரமாக நடந்தது என்றும், சுஷாந்தின் வீட்டிலுள்ள ஊழியர்கள் அனைவரும் கதவைத் உடைத்து திறந்து பார்த்தப் போது அவர் ஃபேனில் தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகவும் நீரஜ் தெரிவித்துள்ளார்.

முதல் ஆளாக பார்த்தார்
பூட்டு தொழிலாளியின் மூலம் கதவை உடைத்து திறந்ததும், சித்தார்த் பிதானிதான் முதல் ஆளாக உள்ளே சென்றார். அப்போது நான் தீபேஷ் மற்றும் சித்தார்த் பிதானி ஆகிய மூன்று பேர்தான் வீட்டில் இருந்தோம். நாங்கள் உள்ளே போனதும் சுஷாந்த் சார் ஃபேனில் தூக்கில் தொங்கியதைதான் பார்த்தோம்.

அறைக்குள் போகவில்லை
சித்தார்த் தலையைப் பிடித்துக்கொண்டு அறைக்கு வெளியே ஓடி வந்துவிட்டார். நாங்கள் பயந்து போய் அறைக்குள் கூட செல்லவில்லை என நீரஜ் தெரிவித்துள்ளார். சுஷாந்தின் வழக்கு நாள்தோறும் பல அதிரடி திருப்பங்களை சந்தித்து வரும் நிலையில் நீரஜிடம் நடத்தப்படும் விசாரணை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications