நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை.. பிரபல ஹீரோ, இயக்குனருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி!
மும்பை: சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை தொடர்பாக, சல்மான் கான், கரண் ஜோஹர் உள்ளிட்டவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கைக் கதையில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர், பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.
இவர் கடந்த மாதம் திடீரென தற்கொலை செய்துகொண்டார். இது பாலிவுட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வாக்குவாதங்கள்
அவர் மன அழுத்தம் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. சுஷாந்தின் இந்த தற்கொலை, இந்தி சினிமாவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திறமையான நடிகர்களை மட்டம் தட்டி, வாரிசு நடிகர், நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் இவர்களால் மற்றவர்களுக்கான வாய்ப்பு பறிபோகிறது என்பது உள்ளிட்ட பிரச்னைகளை வைத்து சமூக வலைத்தளங்களில் காரசாரமான வாக்குவாதங்கள் நடந்தன.

சரமாரியாக விளாசினர்
வாரிசு நடிகர், நடிகைகளின் சமூக வலைத்தள பக்கங்களுக்கே சென்று சரமாரியாக விளாசினர். இதனால் நடிகை சோனாக்ஷி சின்ஹா ட்விட்டர் கணக்கை மூடிவிட்டார். கரண் ஜோஹர், சோனம் கபூர், ஆலியா பட், நடிகர் சல்மான் கான் ஆகியோர் மீதும் இந்த குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. சுஷாந்த் சிங்கின் ரசிகர்கள், இவர்களை விளாசி வந்தனர்.

சல்மான் கான்
இந்நிலையில், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் கரண் ஜோஹரும் அவரது நிறுவனமும் சுஷாந்தின் வாய்ப்புகளை முடக்கியதாக ஒருதரப்பு குற்றம் சாட்டியது. இந்நிலையில் பீகாரைச் சேர்ந்த சுதிர் குமார் ஓஜா என்ற வழக்கறிஞர், பிரபல ஹீரோ சல்மான் கான், ஏக்தா கபூர், சஜித் நதியத்வாலா, இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி, பூஷன்குமார் ஆகியோர் மீது வழக்குத் தொடர்ந்தார்.

நீதி வேண்டும்
இந்த வழக்கை விசாரித்த தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முகேஷ் குமார், தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து தான் அப்பீல் செய்ய இருப்பதாக, வழக்கறிஞர் ஓஜா தெரிவித்துள்ளார். சுஷாந்த் சிங் தற்கொலையால் பீகார் சோகத்தில் இருக்கிறது. அவரை தற்கொலைக்கு தூண்டி இருக்கிறார்கள். இதற்கு நீதி வேண்டும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











