நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலையில் வேறு ஏதோ இருக்கிறது..போலீஸ் அதிகாரி மைத்துனர் சந்தேகம்!
மும்பை: நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையில் வேறு ஏதோ இருக்கிறது என்று போலீஸ் அதிகாரியான அவரது சகோதரி கணவர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், தனது வீட்டில் தூக்குப் போட்டு நேற்று தற்கொலை செய்துகொண்டார்.
இளம் நடிகர் ஒருவர் திடீரென தற்கொலை செய்துகொண்டது இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தோனியின் வாழ்க்கை
கை போ சே என்ற இந்தி படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் இவர். சுத் தேஸி ரொமான்ஸ், ஆமீர்கானின் பிகே ஆகிய படங்களில் நடித்த சுஷாந்த், கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை கதையான, எம்.எஸ்.தோனி: அன்டோல்ட் ஸ்டோரி படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார். இந்தப் படத்தை அடுத்து ராப்தா, வெல்கம் நியூயார்க், சிச்சோர், கேதார்நாத், டிரைவ் ஆகிய படங்களில் நடித்தார்.

தூக்குப் போட்டு
இந்தப் படங்கள் அவருக்கு பெயரை பெற்றுத் தந்தன. இந்நிலையில் சுஷாந்தின் மானேஜர் திஷா சாலியன், கடந்த சில நாட்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்டார். இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தும் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டது, இந்தி திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியது.

சந்தித்த பிரச்னை
இந்நிலையில் சுஷாந்த் சிங் வீட்டில் இருந்து, மருந்து, மாத்திரைகள் மற்றும் மருந்து சீட்டுகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அது மன அழுத்தத்துக்காக அவர் பயன்படுத்திய மருந்துகள் என்று கூறப்படுகிறது. சுஷாந்துக்கு உண்மையிலேயே மன அழுத்தம்தானா? அவர் சந்தித்த பிரச்னை என்ன என்பது உள்ளிட்ட விஷயங்களை, சுஷாந்தின் டாக்டரிடம் போலீசார் விசாரிக்க உள்ளனர்.

சகோதரி கணவர்
இதற்கிடையே, சுஷாந்த் சிங் தற்கொலைக்குப் பின் வேறு ஏதோ இருக்கிறது என்று அவரது சகோதரி கணவர் ஓ.பி சிங் தெரிவித்துள்ளார். இவர் ஹரியானா மாநில முதலமைச்சர் அலுவலகத்தில், கூடுதல் டி.ஜி.பியாக இருக்கிறார். அவர் கூறும்போது, 'சுஷாந்த் சிங் பாசிட்டிவானவர். அவர் தற்கொலை செய்துகொள்கிறவர் அல்ல. கடவுளை நம்புகிறவர் என்று தெரிவித்துள்ளார். இது பாலிவுட்டில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











