'சுஷாந்த் சிங் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை.. எய்ம்ஸ் மருத்துவர் சொன்னார்..' குடும்ப வக்கீல் பகீர்!
மும்பை: சுஷாந்த் சிங் ராஜ்புத் கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என எய்ம்ஸ் மருத்துவர் ஒருவர் கூறியதாக அவரது வழக்கறிஞர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ஜூன் மாதம் 14 ஆம் தேதி மும்பையில் சடலமாக மீட்கப்பட்டார்.
அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டது. இது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மன அழுத்தம்
கிரிக்கெட் வீரர் தோனியின் பயோபிக்கில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர், சுஷாந்த் சிங். மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பீகாரில் வசித்து வரும் சுஷாந்தின் தந்தை பாட்னா போலீசில் புகார் அளித்தார். அதில், சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்கரவர்த்தி மீது குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார்.

அமலாக்கத்துறை
நடிகை ரியா, சுஷாந்த்தை தற்கொலைக்குத் தூண்டியதாகவும் அவர் வங்கி கணக்குகளை கையாண்டு வந்த அவர் பண மோசடி செய்ததாகவும் கூறியிருந்தார். பண மோசடி மற்றும் பணபரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை, விசாரணை நடத்தியது. இந்நிலையில் இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது.

போதைப் பொருள் கும்பல்
பணமோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரித்த போது ரியாவின் வாட்ஸ்அப் உரையாடல்கள் மூலம் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுபற்றி விசாரித்த போதைப் பொருள் தடுப்புப்பிரிவு போலீசார், நடிகை ரியா அவர் சகோதரர் சோவிக் சக்கரவர்த்தி, சாமுவேல் மிரண்டா உட்பட சிலரை கைது செய்தனர். இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

தீபிகா படுகோன்
இந்த வழக்கில் நடிகைகள் தீபிகா படுகோன், ரகுல் பிரீத் சிங், ஷரத்தா கபூர், சாரா அலிகான் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ரகுல் பிரீத் சிங்கிடம் போதைத் தடுப்புப் பிரிவு போலீசார் நேற்று 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் சுஷாந்த் சிங்கின் குடும்ப வழக்கறிஞர் விகாஷ் சிங் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

சிபிஐ தாமதம்
அவர் கூறும்போது, இந்த வழக்கு எந்த கோணத்தில் செல்கிறது என்பது தெரியாததால், உதவியற்றவர்களாக இருக்கிறோம். சுஷாந்த் வழக்கை, தற்கொலை என்ற கோணத்தில் இருந்து கொலை வழக்காக மாற்ற சிபிஐ தாமதம் செய்து வருவது எங்களுக்கு விரக்தியை அளிக்கிறது.

கழுத்தை நெரித்து
சுஷாந்த் சிங் மரணத்தைத் தொடர்ந்து அவர் சடலத்தின் புகைப்படத்தை எய்ம்ஸ் மருத்துவர் ஒருவருக்கு அனுப்பி வைத்தேன். அதை ஆய்வு செய்த அவர், 200 சதவீதம் சுஷாந்த் தற்கொலை செய்யவில்லை, கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று கூறியதாகக் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











