சுப்ரமணியபுரம் சுவாதியை ஞாபகமிருக்கா.. கோயிலுக்குச் செல்ல புர்கா அணிந்து சென்றதால் திடீர் பரபரப்பு!
சென்னை: டேஞ்சர் எனும் தெலுங்கு படத்தில் 2005ல் சினிமாவில் அறிமுகமான நடிகை சுவாதி ரெட்டி தமிழ் சினிமாவுக்கு மட்டுமின்றி இந்திய சினிமாவுக்கே சசிகுமார் இயக்கி நடித்த சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் தான் நன்கு பரீட்சையமானார்.
சுப்ரமணியபுரம் படத்தில் ஜெய்யும் சுவாதி ரெட்டியும் காதல் செய்யும் போது இடம்பெறும் அந்த "கண்கள் இரண்டால்" பாடல் பட்டித் தொட்டி எங்கும் ஒலித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
சுப்ரமணியபுரம் படத்தைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த சுவாதி ரெட்டி கடந்த 2018ம் ஆண்டு திடீரென திருமணம் செய்துக் கொண்டு சினிமாவுக்கு குட்பை சொல்லி விட்டார். இந்நிலையில், புர்கா அணிந்து கொண்டு அவர் சென்ற வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட அது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

சுப்ரமணியபுரம் நடிகை சுவாதி: 2008ம் ஆண்டு வெளியான தமிழ் சினிமாவின் தரமான கேங்ஸ்டர் திரைப்படமான சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் சுவாதி ரெட்டி.
அந்த படத்திற்கு பிறகு கனிமொழி, போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, யட்சன், யாக்கை, திரி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தார். ஆனால், தமிழில் பெரிய நடிகையாக அவரால் ஷைன் ஆக முடியவில்லை. தெலுங்கு மற்றும் மலையாளத்தில் நடித்து வந்த சுவாதி ரெட்டிக்கு தற்போது 36 வயதாகிறது.

பைலட் உடன் திருமணம்: தெத்து பல் அழகில் சினிமா ரசிகர்களை கவர்ந்து வந்த சுவாதி ரெட்டி கடந்த 2018ம் ஆண்டு விமான ஓட்டுநரான விகாஸ் வாசு என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.
அதன் பின்னர், சினிமாவுக்கு சின்ன பிரேக் விட்ட சுவாதி ரெட்டி தொடர்ந்து 2022ம் ஆண்டு தெலுங்கில் பஞ்சதந்திரம் படத்தில் நடித்திருந்தார். மந்த் ஆஃப் மது, இடியட்ஸ் உள்ளிட்ட தெலுங்கு படங்கள் இவரது நடிப்பில் விரைவில் வெளியாக உள்ளன. இந்நிலையில், ரயில் பயணத்தின் போது புர்கா அணிந்து சுவாதி ரெட்டி சென்ற வீடியோவை அவரே தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
கோயிலுக்கு செல்ல புர்காவை பயன்படுத்துவதா?: நடிகை சுவாதி ரெட்டி கோயில் தரிசனத்துக்காக ரயில் பயணம் மேற்கொண்டு இருக்கிறார். ஆனால், ரயில் நிலையத்துக்குச் செல்லும் போது தன்னை யாரும் அடையாளம் கண்டு விடக் கூடாது என்பதற்காக புர்கா அணிந்து சென்றிருக்கிறார்.
அதனை பார்த்த நெட்டிசன்கள் சிலர், கோயில் தரிசனத்துக்காக செல்லும் போது புர்கா அணிந்து செல்லலாமா? என்றும் அதற்கு பதிலாக மாஸ்க் அணிந்து சென்றாலே நீங்கள் யாரென யாருக்கும் தெரியாது என கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளனர்.
சுவாதி விளக்கம்: சர்ச்சை வெடித்த நிலையில், நடிகை சுவாதி ரெட்டி எப்போதுமே தான் வெளியே செல்லும் போது இந்த புர்காவை பயன்படுத்தி வருகிறேன் என்றும் இதனால், சகஜமாக மக்களோடு மக்களாக என்னால் பயணிக்க முடிகிறது என்றும் நினைத்த இடத்தில் மசாலா லெமன் சோடாவை குடிக்க முடிகிறது என்றும் பதிவிட்டுள்ளார்.
ஆனால், சுவாதியின் விளக்கத்தை பார்த்த ரசிகர்கள் நீங்க சும்மா போனால் கூட உங்களை யாரும் கண்டுக்க மாட்டாங்க என ட்ரோல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











