ஆரம்பிக்கிறதுக்குள்ள இத்தனை தடங்கல்கள் - இன்னும் தாமதமாகும் 'சைரா' ஷூட்டிங்!
ஐதராபாத் : ஆந்திராவை சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரரான உய்யலாலா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு 'சைரா' படம் பிரமாண்டமாகத் தயாரிக்கப்படுகிறது.
சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், சுதீப், விஜய் சேதுபதி, ஜெகபதி பாபு, நயன்தாரா என இந்தியத் திரையுலகின் முக்கிய நடிகர்கள் நடிக்க கடந்த ஆகஸ்ட் மாதம் சிரஞ்சீவியின் பிறந்த நாளை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட சரித்திரப் படம் 'சைரா'.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன. தற்போது ஷூட்டிங் தொடங்குவதற்குள் படக்குழுவில் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்
இப்படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் அப்போதே அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால், தற்போது இந்தப் படத்திலிருந்து விலகிவிட்டதாக சில நாட்களுக்கு முன்பு ஐதராபாத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பேசியிருக்கிறார்.

ரஹ்மான் விலகல்
'சைரா' படத்திற்கு முன்பே பணிபுரிவதாக சம்மதித்த படங்களின் பணிகள் அதிகமாக இருப்பதால் இப்படத்திலிருந்து விலகுவதாகவும், விலகுவதும் வருத்தமளிப்பதாக உள்ளது என்றும் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் வெளியேறிவிட்டதால் அவருக்குப் பதிலாக யாரை ஒப்பந்தம் செய்ய உள்ளார்கள் என்பது இன்னும் தெரியவில்லை.

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் விலகல்
'சைரா ' படத்தின் ஒளிப்பதிவாளராக அறிவிக்கப்பட்ட ரவிவர்மன் அப்படத்திலிருந்து சில வாரங்களிலேயே வெளியேறினார். அவருக்குப் பதிலாக ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

ஆரம்பமே சறுக்கல்
ஏ.ஆர்.ரஹ்மான் அப்படத்திலிருந்ததால் சர்வதேச அளவில் ட்ரெண்ட் ஆகும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. திட்டமிட்டபடி படத்தின் ஆரம்ப கட்ட வேலைகள் நடைபெறாததே இசையமைப்பாளரும், ஒளிப்பதிவாளரும் வெளியேறியதற்கான காரணம் என்று சொல்லப்படுகிறது.

ரசிகர்கள் வருத்தம்
பிரம்மாண்ட சரித்திரப் படமாக 150 கோடி ரூபாய் செலவில் உருவாக உள்ள 'சைரா' படத்தின் இந்த ஆரம்ப சிக்கல்கள் சிரஞ்சீவியின் ரசிகர்களை வருத்தமடைய வைத்துள்ளன. சிக்கல்கள் தீர்ந்து விரைவில் படத்தைத் தொடங்கவேண்டும் என எதிர்பார்த்து வருகிறார்கள் டோலிவுட் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











