நவம்பர் 22-ல் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்.. தலைவர் பதவிக்கு 3 பேர் போட்டி!
சென்னை: தமிழ் திரைபடத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் 3 பேர் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.
Recommended Video
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுவது வழக்கம்.
கடந்த தேர்தலில் வெற்றி பெற்று நடிகர் விஷால் தலைவராக இருந்தார். அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டதால் பிரச்னை ஏற்பட்டது.

உயர்நீதிமன்றம்
பின்னர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இதற்கிடையே அரசு, சங்கத்தை நிர்வகிக்க தனி அதிகாரியை நியமித்தது. இந்நிலையில் உயர்நீதிமன்றம் தேர்தல் அதிகாரியாக, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி எம்.ஜெய்சந்திரனை அறிவித்து, தேர்தல் நடத்த உத்தரவிட்டது. கொரோனா காரணமாக சில முறை தேர்தல் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

அவகாசம் நீட்டிப்பு
இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்தி முடிக்க வரும் டிசம்பர் மாதம் 31ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து தேர்தல் அதிகாரி எம்.ஜெய்சந்திரன் தேர்தல் தேதியை அறிவித்துள்ளார். அதன்படி நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.

டி.ராஜேந்தர், தேனப்பன்
இதில், தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், ‘தேனாண்டாள் பிலிம்ஸ்' என்.ராமசாமி என்கிற முரளி ராம.நாராயணன், பி.எல்.தேனப்பன் ஆகிய 3 பேர் போட்டியிடுகிறார்கள். துணைத் தலைவர்கள் பதவிக்கு சிவசக்தி பாண்டியன், பி.டி.செல்வகுமார், முருகன், ஆர்.கே.சுரேஷ் ஆகிய 4 பேர் போட்டியிடுகிறார்கள்.

வேட்பு மனுதாக்கல்
செயலாளர்கள் பதவிக்கு கலைப்புலி ஜி.சேகரன், மன்னன், சுபாஷ் சந்திரபோஸ், ராதாகிருஷ்ணன், ராஜேஷ் ஆகியோரும், பொருளாளர் பதவிக்கு கே.ராஜன், சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள். இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், கடந்த 15- ஆம் தேதி தொடங்கியது.

ஓட்டுப்பதிவு
டி.ராஜேந்தர், முரளி, பி.எல்.தேனப்பன் ஆகியோர் நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்தார்கள். வேட்பு மனுவை வாபஸ் பெற வருகிற 29 ஆம் தேதி கடைசி நாளாகும். ஓட்டுப்பதிவு நவம்பர் 22- ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. அன்று மாலை முடிவுகள் அறிவிக்கப்படும்.


Click it and Unblock the Notifications











