டி ராஜேந்தர் கார் மோதி பிச்சைக்காரர் பரிதாபமாக உயிரிழப்பு.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி
சென்னை: இயக்குநரும் நடிகருமான டி ராஜேந்தரின் கார் மோதி பிச்சைக்காரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மாற்றுத் திறனாளியான அந்த பிச்சைக்காரர் சாலையை கடக்க முயன்ற போது டி ராஜேந்தரின் கார் எதிர்பாராத விதமாக மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.
இந்நிலையில், தற்போது அந்த விபத்து நடந்ததை பதிவு செய்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

டி ராஜேந்தர் கார் மோதி விபத்து
சென்னை, தேனாம்பேட்டை இளங்கோ சாலை அருகே மாற்றுத்திறனாளியான பிச்சைக்காரர் ஒருவர் கடந்த மார்ச் 18-ம்தேதி சாலையை கடந்து சென்றார். அப்போது நடிகர் டி.ராஜேந்தர் சென்ற கார் எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியதில் பெரும் விபத்து நிகழ்ந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிச்சைக்காரர் உயிரிழப்பு
விபத்து நடந்த உடனே அந்த பிச்சைக்காரர் பலத்த காயமடைந்தார். உடனடியாக டி.ராஜேந்தர் வேறொரு காரில் படுகாயமடைந்த மாற்றுத்திறனாளியை சிகிச்சைக்காக சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டார்.

டிரைவர் கைது
இது தொடர்பாக பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கார் ஓட்டிச்சென்ற கார் ஓட்டுனர் செல்வம் என்பவர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அவர் மீது அஜாக்கிரதையாக இருந்து மரணத்தை விளைவித்தல் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்தனர். பிறகு ஜாமினில் அவர் விடுவிக்கப்பட்டார்.

சிசிடிவி வெளியீடு
இந்நிலையில் டி ராஜேந்தர் ஓட்டிச் சென்ற கார் எப்படி சாலையை கடக்க முயன்று அந்த மாற்றுத் திறனாளி பிச்சைக்காரர் மீது மோதி அவரது உயிரை குடித்தது என்கிற விபத்து தொடர்பான பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது.

கண்ணீர் அஞ்சலி போஸ்டர்
இறந்தவர் முனுசாமி எனும் கபாலி என அவரது புகைப்படத்துடன் கண்ணீர் அஞ்சலி போஸ்டரையும் நல்லான் தெரு நண்பர்கள் அடித்து ஒட்டியிருக்கின்றனர். நடிகர் டி ராஜேந்தர் பாதிக்கப்பட்ட அந்த நபருக்கு குடும்பம் இருந்தால் அவரது குடும்பத்தினருக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications











