Vijay: “பண்ணவில்லை விமர்சனம்... தேவை விமோச்சனம்” விஜய்க்கு டி ராஜேந்தர் கொடுத்த அடுக்கு மொழி பன்ச்!
சென்னை: விஜய் அரசியலுக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார். இதனால் சினிமாவில் இருந்தும் முழுமையாக விலகுவதாக விஜய் அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே, விஜய்க்கு அரசியல் கட்சித் தலைவர்கள் முதல் பிரபலங்கள் வரை வாழ்த்துத் தெரிவித்தனர். இந்த வரிசையில் டி ராஜேந்தரும் தனது வழக்கமான ஸ்டைலில் விஜய்க்கு பன்ச் கொடுத்துள்ளார்.
விஜய்க்கு டி ராஜேந்தர் கொடுத்த பன்ச்
கோலிவுட் ரசிகர்களால் தளபதி என கொண்டாடப்படும் விஜய் தற்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து இன்னும் ஒரேயொரு படத்தில் மட்டும் நடிக்கவுள்ள விஜய் அதன் பின்னர் சினிமாவில் இருந்தே விலகுவதாக அறிவித்துவிட்டார். இனி முழுநேர அரசியல் தான் என முடிவு செய்துவிட்டதால் சினிமாவில் இருந்து விலகுகிறார் விஜய்.

இதுகுறித்து விஜய் இரண்டு பக்க அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதில் தனது கட்சியின் பெயரையும் அறிவித்திருந்தார். அதன்படி தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாட்டில் புதிய அரசியல் கட்சியாக உருவாகியுள்ளது. ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இப்போது நேரடியாகவே அரசியலில் களமிறங்குகிறார் விஜய்.
இதனையடுத்து விஜய்க்கு திரை பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துத் தெரிவித்திருந்தனர். இவர்களது வரிசையில் சிம்புவின் தந்தையும் கோலிவுட்டின் சகலகலா வல்லவருமான டி ராஜேந்தர் விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். டி ராஜேந்தரும் தனியாக அரசியல் கட்சித் தொடங்கி தேர்தல்களில் போட்டியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் விஜய்யை வாழ்த்தியுள்ள டி.ஆர், “அரசியல் என்பது பொதுவழி, யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். விஜய்க்கு வாழ்த்துகள், அவரைப் பற்றி பண்ணவில்லை விமர்சனம், நான் கடவுளிடம் கேட்பது தமிழ்நாட்டு மக்களுக்கு விமோச்சனம்” என அடுக்கு மொழியில் பன்ச் கொடுத்துள்ளார். விஜய் அரசியல் கட்சி தொடங்கியது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டதற்கு, டி ராஜேந்தர் இவ்வாறு வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், நடிகர் சமுத்திரகனியும் விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். “திரை உலகில் உச்சத்தின் உச்சத்தில் இருக்கும்போது மக்கள் பணியாற்ற வந்த தைரியமான முதல் மனிதன். பிரபஞ்சம் உம்மை வெல்லச் செய்யட்டும்.. உம் கனவுகள் மெய்ப்படட்டும். வாழ்த்துக்கள் சகோதரா” என ட்வீட் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











