அவங்கதான் கட்டுறாங்க வரி..ஏத்திக்கிட்டே இருக்கீங்க வலி..அரசுக்கு அப்படி கோரிக்கை வைத்த டி.ராஜேந்தர்!
சென்னை: தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்க தலைவர், நடிகர் டி.ராஜேந்தர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கொரோனா காரணமாக, திரையரங்குகள் 50 சதவிகித இருக்கைகளுடன் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது.
நூறு சதவிகித இருக்கைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று திரைத்துறையினர் கோரிக்கை வைத்து வந்தனர்.

நேரில் சந்தித்து
இதுதொடர்பாக நடிகர் விஜய், தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார். நடிகர் சிம்புவும் கோரிக்கை வைத்தார். பொங்கலுக்கு, விஜய்யின் மாஸ்டர் படமும் சிம்புவின் ஈஸ்வரன் படங்கள் வெளியாவதை அடுத்து அவர்கள் இந்த கோரிக்கையை வைத்து இருந்தனர்.

எதிர்ப்பு கிளம்பியது
இதையடுத்து, தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. இதை சினிமா துறையினர் வரவேற்று இருந்தனர். ஆனால், மருத்துவர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. மத்திய அரசும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.

டி.ராஜேந்தர் வீடியோ
இதையடுத்து, 100 சதவீத இருக்கைகளின் அனுமதியை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. மத்திய அரசின் மறு உத்தரவு வரும் வரை 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. கூடவே, சிறப்புக் காட்சிகளை திரையிடவும் அனுமதி அளித்தது. இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்க தலைவர், நடிகர் டி.ராஜேந்தர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

துரதிஷ்டவசமாக
அதில், தமிழக முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்கக் கோரி தமிழக அரசு அனுமதி கொடுத்தது. ஆனால், துரதிஷ்டவசமாக 50 சதவீதம்தான் அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துவிட்டது.

ஏன் செலுத்த வேண்டும்?
மத்திய அரசு, 50 சதவீத இருக்கைகள்தான் அனுமதிக்க வேண்டும் என்று சொல்கிறது. அப்படி என்றால் நாங்கள் ஏன், முழுமையாக 12 சதவீதம் ஜி.எஸ்.டி வரி செலுத்த வேண்டும்? தமிழகத்தில் ஒரு சில இடங்களில்தான் கடற்கரை உள்ளது. இதை விட்டால் மக்களுக்கு என்று இருக்கும் பொழுது போக்கு சினிமாதான்.

ஏத்திக்கிட்டே இருக்கீங்க
மக்களுக்கு பொழுதுபோக்க, வேற என்ன இருக்கு வழி? சினிமா டிக்கெட் எடுத்தால் அவங்கதான் கட்டவேண்டி இருக்கு வரி. அவங்க தலையில ஏத்திக்கிட்டே இருக்கீங்க வலி. இந்த மக்களுக்காகவாவது, கேளிக்கை வரியான 8 சதவீதத்தை நீக்க வேண்டும். எங்கள் கலை உலகத்தினரின் இந்த கவலையை, கஷ்டத்தைப் போக்கவேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











