விஜய்க்குதான் பேராட்சி.. எதுகை மோனையில் கலக்கி விஜய்யை இப்படி புகழ்றாரே.. டிஆரின் புதிய அவதாரம்
சென்னை: இயக்குநரும், சிம்புவின் தந்தையுமான டி.ராஜேந்தர் புதிய அவதாரமாக யூடியூப் சேனலை தொடங்கியிருக்கிறார். அவரது சேனலுக்கு ரசிகர்களிடையே பெரிய வரவேற்பு இருக்கிறது. சினிமாவில் தான் சந்தித்த அனுபவங்களை பகிர்ந்துவரும் அவர் நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பற்றி பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.
சினிமாவில் எந்த பின்னணியும் இல்லாமல் வந்தவர் டி.ராஜேந்தார். இயக்கம், நடிப்பு, இசை, பாடல்கள் பாடுவது, எழுதுவது என அத்தனை வித்தைகளையும் கற்றுக்கொண்டு உள்ளே வந்த அவருக்கு முதல் பட வாய்ப்பு அவ்வளவு எளிதாக கிடைத்துவிடவில்லை. தயாரிப்பாளர் கொடுத்த நெருக்கடிகளை சந்தித்து தனது திரை பயணத்தை ஆரம்பித்த அவருக்கு முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றி கிடைத்தது.
வரிசையாக ஹிட்டுகள்தான்: முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு தயாரிப்பாளர்கள் ராஜேந்தரை அதிகம் புக் செய்ய ஆரம்பித்தார்கள். அதன்படி என் தங்கை கல்யாணி, உயிருள்ளவரை உஷா என பல படங்களை ஹிட் படங்களாக கொடுத்தார். மேலும் அமலா உள்ளிட்ட நடிகைகளையும் கோலிவுட்டுக்கு அறிமுகப்படுத்திய பெருமை அவரையே சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து துறைகளிலும்: டி.ஆர். உள்ளே வந்தபோது இசையில் இளையராஜா கொடி உயர பறந்து கொண்டிருந்தது. அந்த காலகட்டத்தில் எதற்கும் அஞ்சாமல் தனக்குள் இருக்கும் இசை திறமையை நம்பி தானே இசையமைத்தார். அவரது இயக்கம் எப்படி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதோ அதேபோல் இசையும் சூப்பர் ரெஸ்பான்ஸை பெற்றது. இது ஒருபக்கம் இருக்க அவரது படங்களை தமிழ்நாட்டில் இருக்கும் குடும்பங்கள் கொண்டாடி தீர்த்தன. ஏனெனில் அவரது படங்களில் கிளாமர் என்பது அறவே இருக்காது.
மகனும் சினிமாவில்: தனது வழியில் தனது மகனையும் சினிமாவில் கொண்டு வந்த டி.ராஜேந்தர் சிறு வயதிலிருந்தே சிம்புவை நடிக்க வைத்தார். அவரும் ராஜேந்தர் போலவே பல துறைகளில் கெத்து காண்பிக்க ஆரம்பித்து இப்போது கோலிவுட்டின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். சூழல் இப்படி இருக்க காலத்துக்கேற்ப மாறியிருக்கிறார் டி.ராஜேந்தர். அதாவது டி.ஆர். டாக்கீஸ் என்கிற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியிருக்கிறார்.
விஜய் பற்றி பேச்சு: அந்த சேனலில் தனது வழக்கமான ட்ரேட் மார்க் எதுகை மோனைகளோடு சினிமாவில் தான் சந்தித்த அனுபவங்கள், பிற ஹீரோக்கள் பற்றி பகிர்ந்துவருகிறார். அந்தவகையில் ஒரு வீடியோவில் விஜய் பற்றி பேசிய அவர், "ஒருகாலகட்டத்தில் விஜய்யை எனக்கு பிடிக்க ஆரம்பித்தது. எதற்காக எனது இனிய நண்பர் விக்ரமன் இயக்கிய பூவே உனக்காக. அது மட்டுமில்லை எஸ்.ஜே.சூர்யா இயக்கிய குஷி; அந்தப் படத்திலிருந்து விஜய் ஆக ஆரம்பித்தார் பிஸி. தரணி இயக்கிய கில்லி அந்தப் படத்தில் நின்றார் தான் தனி முத்திரை பதிப்பேன் என்று சொல்லி. அதுபோல ரசிகர்களின் உள்ளத்தை அள்ளும், கொள்ளை கொள்ளும் என்று சொல்லாமல் சொல்லி அவர் நடித்த படம்தான் துள்ளாத மனமும் துள்ளும்.
விஜய்க்கு பேராட்சி: எனக்கு காதல்னா பிடிக்கும். அதனால்தான் ஃபாசில் இயக்கிய காதலுக்கு மரியாதை. அந்தப் படத்திலிருந்து விஜய் மீது எனக்கு ஏற்பட்டது பெரிய மரியாதை.புதிய மரியாதை. எனக்கு தங்கச்சி பாசம் என்றால் பிடிக்கும் அதனால்தான் பேரரசு இயக்கிய திருப்பாச்சி. அந்தப் படத்தின் மூலம் விஜய்க்கு தாய், தங்கைகளிடத்தில் பெரும் பேராட்சி" என்றார்.


Click it and Unblock the Notifications











