தபேலா பிரசாத் காலமானார்...நான்கு தலைமுறை இசையமைப்பாளர்களிடம் தபேலா வாசித்தவர்
சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், இந்தி, தெலுங்கு என புகழ்ப்பெற்ற இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய 4 தலைமுறைக்கண்ட தபேலா கலைஞர் பிரசாத் சென்னையில் காலமானார். பல சிறந்த பாடல்கள் இவரது தபேலாவுக்காகவே ரசிகர்களால் ரசிக்கப்பட்டுள்ளது.

60 ஆயிரம் பாடல்களுக்கு தபேலா வாசித்தவர்
80 வயது, 60,000 பாடல்களுக்கு மேல் தபேலா வாசித்துள்ளார். 7 வயதில் ஆரம்பித்த பயணம் இக்கால இளைஞர்களும் விரும்பும் உருகுதே மருகுதே பாடல் தொடங்கி, 90 களில் பிரபலமான சின்னத்தம்பியில் போவோமா ஊர்கோலம், கரகாட்டக்காரன் படத்தில் மதுர மரிக்கொழுந்து வாசம், வராக நதிக்கரை ஓரம் பாடல், ராகங்கள் பதினாறு உருவான வரலாறு. பூவே செம்பூவே, முத்துமணி மாலை, ஒருநாளும் உனை மறவாத போன்ற பாடல்கள் தபேலாவுக்காக கேட்கப்பட்ட பாடல்களுக்கு சொந்தக்காரர் தபேலா பிரசாத். 90 களில் இளையராஜாவின் கந்தர்வ பாடல்களில் பிரசாத்தின் கைவண்ணம் தனியாக தெரியும்.

தந்தை மூலம் இசைத்துறை அறிமுகம்
பூர்வீகம் ஆந்திரா , தந்தை ஜெகந்நாத ராவ் 1940 களில் ஜெமினி ஸ்டுடியோவில் பர்மனண்ட் தபேலா கலைஞர். சரித்திர புகழ்ப்பெற்ற சந்திரலேகா, அபூர்வ சகோதரர்கள் போன்ற படங்களில் வாசித்தவர். அந்த நேரத்தில் 1950-களில் தந்தையுடன் சேர்ந்து கைப்பிடித்து நடந்த பிரசாத்துக்கு 7 வயதிலேயே தபேலா வாசிக்கும் திறமை வந்துவிட்டது. பின்னர் தனது 14 வது வயதில் கண்டசாலாவின் ட்ரூப்பில் அவரது முதல் பயணம் தொடங்கியுள்ளது.

எம்.எஸ்.வி முதல் ஜிவி பிரகாஷ் வரை
70 களில் எம்.எஸ் விஸ்வநாதன் இயக்கத்தில் சிவகங்கை சீமை, எங்கிருந்தோ வந்தாள் போன்ற படங்களுக்கு வாசித்து அதனால் எம்.எஸ்.வி இவரை தனது குழுவில் நிரந்தரமாக இணைத்துக்கொண்டார். அண்ணன் ஒரு கோவிலென்றால் என்கிற பாடலுக்கு இவரது தபேலா மிகுந்த வரவேற்பை பெற்றது. 1972 ஆம் ஆண்டு முதல் நிரந்தரமாக எம்.எஸ்.வி குரூப், பின்னர் இளையராஜாவுடன் இணைந்தது, அதன் பின்னர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் ரோஜா படத்தில் ஆரம்பித்து சமீப காலம் வரை வாசித்துள்ளார். இதுதவிர யுவன், கார்த்திக், பவதாரினி, ஜி.வி.பிரகாஷ் வரை வாசித்துள்ளார்.

7 வயதில் நுழைந்து 70 ஆண்டு அனுபவம்
பாட்டையே தபேலாவில் வாசிக்கும் திறமை பெற்றவர். அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெருப்பு பாடலை அப்படியே வாசிப்பார். பில்லா படத்தில் வெத்தலைய போட்டேண்டி, ராகங்கள் பதினாறு உருவான வரலாறு. அப்பா சினிமாத்துறைக்கு வந்ததை அடுத்து சிறுவயதில் அதே ஆர்வத்தில் கேள்வி ஞானமாக 7 வயதிலேயே வாசிக்க ஆரம்பித்துள்ளார். கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக தபேலா வாசித்த அனுபவம் மிக்கவர்.

இசை ஜாம்பவான்களுடன் பணியாற்றிய அனுபவம்
கண்டசாலா தொடங்கி இந்தி இசையமைப்பாளர்கள் ஜாம்பவான்கள் நவ்ஷாத், லக்ஷ்மிகாந்த் பியாரிலால், ஆர்.டி.பர்மன் இசையிலும் தமிழில் எம்.எஸ்.வி தொடங்கி ஜி.வி.பிரகாஷ் வரையிலும் அவரவர் இசையமைப்பில் தபேலா வாசித்துள்ளார் பிரசாத். இளையராஜா அவரது மகன்கள் யுவன்ராஜா, கார்த்திக், ஏ.ஆர்.ரஹ்மான், ஜிவி.பிரகாஷ் வரை இசையமைத்துள்ளார்.

தபேலாவில் வித்தைக்காட்டும் தன்மை
தபேலாவில் பாடல்களையே இசைக்கும் வல்லமை பெற்றவர் பிரசாத். எலந்த பழம் பாடல், சிவாஜி கணேசனின் என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெருப்பு போன்ற பாடல்கள் அவர் எளிதாக வாசிப்பார். அதேபோல் தவில் வாத்தியத்தை தபேலாவில் வாசிக்கும் திறன் பெற்றவர். இது தவிர வித்தியாசமான முறையில் ஒரு குட்டி லவ் ஸ்டோரியை நகைச்சுவையாக தனது தபேலாவில் வாசிப்பதில் வல்லவர். இதை கச்சேரியில் செய்துக்காட்டி பலரது பாராட்டைப் பெற்றுள்ளார்.

குடும்பம் முழுவதும் இசைக்கலைஞர்கள்...
தம்பிகள், மகன்கள், மைத்துனர்கள் என இவரது குடும்பமே தபேலா கலைஞர்கள்தான். தற்போது இவரது பேரனும் வளர்ந்துவரும் தபேலா கலைஞராக உள்ளார். தபேலா இசையை இசைக்க நவீன கருவிகள் வந்தப்பின்னர் இசையமைப்பாளர்கள், கச்சேரியில் பயன்படுத்துவோர் அதை உபயோகிப்பதால் இசையின் தன்மை குறைகிறது, இசைக்கலைஞர்களும் பாதிக்கப்படுகின்றனர் என வேதனை தெரிவித்திருந்தார்.

வயோதிகம் காரணமாக காலமானார்
சமீப காலமாக 80 வயதுக்கும் மேலான முதுமை காரணமாக உடல் நலிவுற்ற நிலையிலிருந்த பிரசாத் நேற்றிரவு காலமானார். அவரது உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது. அவரது மரணம் குறித்த செய்தியறிந்து அவரது மாணவர்கள், இசைத்துறையினர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications