சென்னை வந்தார் பிரபல தைவான் நடிகர்... கபாலிக்காக சொந்தக் குரலில் பேசுகிறார்!
சென்னை: ரஜினிகாந்தின் கபாலி படத்தில் நடித்துள்ள தைவான் நடிகர் வின்ஸ்டன் சாவோ சென்னை வந்துள்ளார். தனது சொந்தக் குரலில் அவர் டப்பிங் பேசுகிறார்.
பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள கபாலி படம் ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்புக்குள்ளாகியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் சாதனைகள் படைத்து வருகிறது.

டப்பிங்
தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் அனைவரும் டப்பிங்கை முடித்து வருகின்றனர்.

ரஜினி
கடந்த வாரம் இந்தப் படத்தின் டப்பிங்குக்காக வந்த ரஜினி, இரண்டே நாட்களில் முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டார்.

தைவான் வில்லன்
கடைசியாக இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடித்த தைவான் நடிகர் வின்ஸ்டன் சாவ் மட்டும் டப்பிங் செய்ய வேண்டியிருந்த நிலையில், இன்று அவர் தைவானில் இருந்து சென்னை வந்துள்ளார்.

சொந்தக் குரலில் தமிழ் வசனங்கள்
கபாலி படத்தில் தான் பேசும் தமிழ் - மலாய் வசனங்களை சொந்தக் குரலில் டப்பிங் செய்ய வேண்டும் என்று விரும்பிய வின்ஸ்டன் சாவ், தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்ற சென்னை வந்திருக்கிறார்.

ரிலீஸ்
இந்த படத்தில் ரஜினியுடன் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ், உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் ஜூன் அல்லது ஜூலை மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











